லத்தீன் அமெரிக்காவை உலுக்கும் ரகசிய ஆடியோக்கள்! – சேது சிவன்
லத்தீன் அமெரிக்க நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்க பன்னாட்டு முதலாளிகளும் அமெரிக்க ஆதரவு வலது சாரி அரசுகளும் இணைந்து தீட்டியுள்ள மிகப்பெரிய சதித்திட்டங்கள் தற்போது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளன.
இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கவும், தொழிலாளர் உரிமைகளை நசுக்கவும் ஏகாதிபத்தியம் தொடுத்துள்ள இந்தப் போர், லத்தீன் அமெரிக்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் ஏகாதிபத்திய அத்துமீறல்கள்
லத்தீன் அமெரிக்காவில் இடதுசாரித் தலைவர்களைக் குறிவைப்பது அமெரிக்காவிற்குப் புதியதல்ல.
1973-இல் சிலியில் சால்வடார் அலெண்டேயைப் படுகொலை செய்தது; 2002-இல் வெனிசுலாவில் ஹியூகோ சாவேஸ் ஆட்சியைக் கவிழ்க்க முயன்றது; 2019-இல் பொலிவியாவில் இவா மோரேல்ஸை அதிகாரத்திலிருந்து அகற்றியது உட்பட இரத்தம் தோய்ந்த கொடிய நீண்ட சரித்திரம் அதற்கு உண்டு.
தற்போது 2026-இல் வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும்; அவரது மனைவியும் மகத்தான பெண் போராளியுமான சிலியா புளோர ஸையும் கடத்தியது வரை அந்தச் சதிவலை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு முறையும் முகங்களும் ஆட்களும் மாறலாம்; ஆனால் அமெரிக்கா மற்றும் பெரும் கார்ப்ப ரேட் முதலாளிகளின் வர்க்க நோக்கம் மாறுவதில்லை.
இயற்கை வளங்களைச் சுரண்டுவதும், ஏகாதிபத்தியக் கொள்கைகளைத் திணிப்பதுமே இவர்களின் மாறாத திட்டமாகும்.
‘ஹோண்டுராஸ் கேட்’ (Honduras gate) – அம்பலமான ரகசியங்கள்
‘ஹோண்டுராஸ் கேட்’ என்ற இணையதளம் வெளியிட்ட ரகசிய ஒலிப்பதிவுகள், இந்தச் சதித்திட்டத்தின் கோர முகத்தை உலகுக்குக் காட்டியுள்ளன.
இந்தப் பதிவுகளை ‘ஃபோனெக்ஸியா வாய்ஸ் இன்ஸ்பெக்டர்’ (Phonexia Voice Inspector) நிறுவனம் தடயவியல் ஆய்வு செய்து, அவை உண்மையானவை என உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த ஒலிப்பதிவுகளில், ஹோண்டுராஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹெர்னாண்டெஸ், இடதுசாரி அரசுகளை வீழ்த்துவதற்கான திட்டங்கள் குறித்துப் பேசியது அம்பலமாகியுள்ளது. இந்தச் சதிவலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு, அர்ஜெண்டி னா ஜனாதிபதி ஜேவியர் மிலே, தற்போதைய ஹோண்டுராஸ் ஜனாதிபதி நாஸ்ரி அஸ்ஃபுரா ஆகியோர் இணைந்துள்ள விபரம் தெரியவந்துள்ளது.
டிரம்ப் வழங்கிய விடுதலையும் அதன் பின்னணியும் அமெரிக்காவிற்கு டன் கணக்கில் போதைப்பொ ருள் கடத்திய குற்றத்திற்காக, அமெரிக்கக் கூட்டாட்சி (பெடரல்) நீதிமன்றத்தால் 45 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர் ஹெர்னாண்டெஸ்.
ஆனால், கடந்த 2025 டிசம்பரில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் திடீரென அவரை மன்னித்து விடுதலை செய்தார்.
இதற்கான காரணத்தை ரகசிய ஒலிப்பதிவுகள் விளக்குகின்றன.
“என்னை விடுதலை செய்வதில் நேதன்யாகுவுக்கு முக்கியத் தொடர்பு இருக்கிறது.மன்னிப்பிற்கான தொகை இஸ்ரேல் ஆதரவுக் குழுக்கள் மூலம் வழங்கப்பட்டது.
நான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்பதே அவர்களின் திட்டம்” என ஹெர்னாண்டெஸ் அந்தப் பதிவில் கூறுகிறார்.
இதற்குத் தடையாக இருக்கும் நீதிபதிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்களை அகற்றும் வேலை ஏற்கெனவே தொடங்கிவிட்டது.
ஏப்ரல் 16 அன்று தேர்தல் முறைகேட்டை அம்பலப்படுத்திய அதிகாரிகள் நீக்கப்பட்டதும், உச்சநீதிமன்றத் தலை வரும் தலைமை வழக்கறிஞரும் விரட்டப்பட்டதும் இந்தச் சதியின் ஒரு பகுதியே ஆகும்.
ஹெர்னாண்டெஸின் கைமாறும் வர்த்தக ஒப்பந்தமும்
மீண்டும் அதிகாரத்தைப் பிடிக்க ஹெர்னாண்டெஸ் மேற்கொள்ளும் இந்தச் சதிக்குக் கைமாறாக, ஹோண்டுராஸ் நாட்டின் இறையாண்மை யையே அமெரிக்காவிடம் அடகு வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
1. ஹோண்டுராஸில் புதிய அமெரிக்க ராணுவத்தளம் அமைத்தல்.
2. அமெரிக்காவுடன் தடையற்ற சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்.
3. ‘சேடே’ (ZEDE) எனப்படும் தனியார் பொருளாதார மண்டலங்களின் விரிவாக்கம்.
இந்தத் தனியார் மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள், குறைந்தபட்ச ஊதியம் அல்லது சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் என எதுவும் செல்லுபடியாகாது.
ரோஆட்டன் (Roatán) மற்றும் கொமயாகுவா (Comayagua) பகுதிகளில் இத்தகைய மண்டலங்களை விரிவாக்க முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
மேலும், கடல்வழிச் சரக்குத் திட்டத்தை ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ நிறுவ னத்திடம் ஒப்படைக்கப் போவதாக ஜனாதிபதி அஸ்ஃபுரா பேசியுள்ளதும் உறுதியாகியுள்ளது.
“பொய்த் தகவல்” போர்
கொலம்பியா ஜனாதிபதி குஸ்தவோ பெட்ரோ மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம் ஆகிய இடதுசாரித் தலைவர்களைச் சிறுமைப் படுத்தும் பணி அர்ஜெண்டினா ஜனாதிபதி மிலேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கு ‘சன்மானமாக’ 3,50,000 அமெரிக்க டாலர் அவர் கொடுப்பதாக பேசப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ஓர் அலுவலகத்தை அமைத்து, அதனை ஒரு நடுநிலையான ‘லத்தீன் அமெரிக்கச் செய்தி தளம்’ போலக் காட்டி, இடதுசாரி அரசுகளுக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
டிரம்ப்பின் ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் இந்தத் தகவல் போருக்குத் தலைமை தாங்குகிறார்.
வன்முறையே முதலாளித்துவத்தின் கொள்கை
வெளியாகியுள்ள ஒலிப்பதிவில், போதைப்பொ ருள் கடத்தல் மன்னன் பாப்லோ எஸ்கோபரை மேற்கோள் காட்டி, “ ஹோண்டுராஸில் வலிமை தேவை; இரத்தம் சிந்தப்பட வேண்டும். வன்முறைக்கு வன்முறையே பதில்” என ஹெர்னாண்டெஸ் பேசுகிறார்.
சொந்த மக்களை அடக்கி ஆள வன்முறையைத் திட்டமிட்டுப் பயன்படுத்துவோம் என்று ஒரு நாட்டின் முன்னாள் தலைவரே பேசுவது முதலாளித்துவத்தின் கோரமுகத்தையும் அதன் வர்க்க இயல்பையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சர்வதேசத் தொழிலாளர் வர்க்கத்தின் கடமை
1917-இல் லெனின் தலைமையில் நிகழ்ந்த அக்டோபர் புரட்சி, தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வர முடியும் என்பதை உலகுக்கு நிரூபித்தது. அன்றிலிருந்து இன்று வரை அதனைத் தடுக்க ஏகாதிபத்தியம் ஓயாமல் சதி செய்கிறது.
நீதிமன்றங்களை விலைக்கு வாங்குவது, ஊடகங்கள் வழி பொய்களைப் பரப்புவது, படுகொலைகளை அரங்கேற்றுவது எனத் தனது நலன்களுக்காக நாடுகளின் இறையாண்மையை மிதிக்க ஏகாதிபத்தியம் தயங்குவதில்லை.
அமெரிக்காவின் அரசியல் ஆதரவு, இஸ்ரேலின் பணம், அர்ஜெண்டினாவின் ஊடகப் பிரச்சாரம் என மூன்றும் இணைந்து லத்தீன் அமெரிக்க மக்களின் ஆட்சியுரிமையைப் பறிக்கத் துடிக்கின்றன.
லத்தீன் அமெரிக்க மக்கள் தங்கள் வளங்களைப் பாதுகாக்கவும், வாழ்வுரிமைக்காகவும் நடத்தும் இந்தப் போராட் டத்தின் பக்கம் நிற்பதே உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் முதன்மையான கடமையாகும்.
– சேது சிவன்
இந்த கட்டுரை முதலில் 9 மே 2026 அன்று தீக்கதிர் பத்திரிகையில் வெளியானது