Tamil Marx

தமிழ் நாடு

பாஜக அரசின் கொள்கையை மாற்றுவாரா அண்ணாமலை?-வே.தூயவன்

பாஜக அரசின் கொள்கையை மாற்றுவாரா அண்ணாமலை?-வே.தூயவன்
  • PublishedFebruary 13, 2026

பல்லடத்தில் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையைத் தங்கள் சங்கக் கூட்டத்திற்கு வரவழைத்துச் சிறப்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்துடனான ‘தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்’ குறித்து அவர் விளக்குவார் என இதற்குக் காரணம் சொல்லப்பட்டுள்ளது.

உற்பத்தியாளர் அமைப்புகளின் அரசியல் சார்பு

பொதுவாக, தொழில் அமைப்புகள் வெளிப்படையான அரசியல் சார்பின்றித் தொழில் சார்ந்த கோரிக்கைகளை அரசுக்கு முன்வைப்பதே வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக மேற்கு மாவட்டங்களில் சில உற்பத்தியாளர் அமைப்புகளின் நிர்வாகிகள், பாஜக ஆதரவு நிலையை வெளிப்படையாக எடுத்து வருகின்றனர்.

திருப்பூரில் சிறு, குறு தொழில்கள் பாஜக அரசின் கொள்கைகளால் நலிவடைந்தபோது மௌனம் காத்த நிர்வாகிகளின் போக்கையே, தற்போது பல்லடத்திலும் காண முடிகிறது.

நலிவடையும் விசைத்தறித் தொழில்

ஒன்றிய அரசின் தொழில் கொள்கைகளால் விசைத்தறித் தொழில் இன்று பெரும் நெருக்கடியில் உள்ளது. ஒருபுறம் நவீன இயந்திரங்களால் உற்பத்தி பெருகினாலும், மறுபுறம் பல்லாயிரக்கணக்கான சாதாரண விசைத்தறிகள் உடைக்கப்பட்டுப் பழைய இரும்பு விலைக்கு விற்கப்பட்டுள்ளன. இந்தத் தொழில் இன்னும் மீளாத நிலையில், அந்த அழிவுக்கு காரணமான கொள்கைகளை அமலாக்கியுள்ள கட்சியின் நபரான அண்ணாமலையிடம் விளக்கம் கேட்பது வேடிக்கையானது.

வர்த்தக ஒப்பந்தங்களின் ஆபத்து

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய விவசாயிகளையும், உள்நாட்டுத் தொழில்களையும் கடுமையாகப் பாதிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பெரும் சந்தை வாய்ப்பைக் குறிவைக்கும் வெளிநாடுகளால், இந்தியாவின் ஜவுளி உள்ளிட்ட உள்நாட்டுத் தொழில்கள் தங்கள் சந்தையை இழக்கும் ஆபத்து உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான இந்தக் கொள்கைகளை அமல்படுத்தும் கட்சியைச் சேர்ந்தவரை அழைத்து வருவது, தொழில் நிலையை மேம்படுத்திவிடாது.

விசைத்தறியாளர்களின் வேதனை

ஜவுளி உற்பத்தியாளர்களில் சிலர் ‘சாதிப் பாசத்துடன்’ அண்ணாமலையை வைத்து ஆதாயம் தேடுவதாக விசைத்தறியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நியாயமான நெசவுக்கூலி உயர்வைத் தர மறுக்கும் உற்பத்தியாளர்கள், தங்கள் லாபத்திற்காக ஒட்டுமொத்தத் தொழில்துறையையும் புறக்கணிப்பதாகக் கருதுகின்றனர்.

இவர்களின் ஒரே கேள்வி: “அண்ணாமலையை வரவழைப்பதன் மூலம் பாஜக அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இவர்களால் மாற்றிவிட முடியுமா?” என்பதே.

இதற்கு நடுநிலையோடு சிந்திக்கும் ஜவுளி உற்பத்தியாளர்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.

– வே.தூயவன்

நன்றி தீக்கதிர், 13 பிப் 2026.

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *