மத அரசியலை வீழ்த்திய வர்க்க அரசியல்
இந்தியா முழுவதும் 400 இடங்களை வெல்வோம் என முழங்கி மத வெறுப்பு அரசியலை முன்னிறுத்திய பாஜகவை வீழ்த்தி இந்தியா கூட்டணியை பஞ்சாப்,ஹரியானா,உபி,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற வைத்துள்ளது வர்க்கப் போராட்டம்.
இந்த மாநிலங்களில் பாஜக சந்தித்து இருப்பது பெரும் பின்னடைவு ஆகும் . ராமர் கோவில் உள்ள பைசாபாத் தொகுதியும் ராமர் அரசியலை முன்னெடுத்த உபியிலும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது என நாடு முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
அதற்கு காரணமே இடது சாரிகள் முன்னெடுத்த வர்க்க போராட்டம் தான்.
2020- 2021 வரை ஒரு ஆண்டு முழுவதுமாக 700 க்கும் மேற்பட்ட விவசாயிகளின் உயிர் தியாகத்தோடு நடைபெற்ற விவசாயிகளின் வர்க்க போராட்டமே பாஜகவின் தோல்விக்கு விதை தூவியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கமான அகில இந்திய விவசாயிகள் சங்கம் நாடு முழுவதும் 500 க்கும் மேற்பட்ட விவாசாய சங்கங்களையும், தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்தது.
தில்லி எல்லையில் இவர்கள் போராடிய அதே வேலையில் நடைமுழுவதும் கிராமப்புற பிரச்சாரணைகளையும் இந்த விவசாய சங்கங்கள் முன்னெடுத்தன. குறிப்பாக மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் கிராமங்கள் தோறும் பாஜகவை வீழ்த்துவோம் என்ற கோஷத்துடன் இந்த போராட்டத்தை செங்கொடி ஏந்தி முன்னெடுத்தது விவசாயிகள் சங்கம் தான்.
வேலையின்மை,வறுமை, விவசாயிகளுக்கு பாஜக செய்த துரோகத்தை தீவிர பிரச்சாரமாக கிராமங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டதில். ஒரு இடதுசாரி கட்சியின் மக்கள் நல அரசியல் திட்டம், தொழிலாளர்கள், விவசாயிகளை ஒருங்கிணைத்தது, இடதுசாரிகட்சிகள் ஒற்றுமை ஆகிய அனைத்தும் இதில் அடங்கியுள்ளது.
ராஜஸ்தான் சிக்கர் தொகுதியில் வென்றுள்ள தோழர் அம்ராராம் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டத்தை வலுப்படுத்தியதுடன் ஷாஜகான்பூர் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். தற்போது விசாய,விவசாய தொழிலாளர்களால் நாடாளுமன்றத்தில் நுழைகிறார்.
அயோத்தியில் பாஜகவின் ராமர் அரசியல் தோல்விக்கு காரணம் களத்தில் கம்யூனிஸ்ட்கள் தூவிய வர்க்கப் போராட்ட விதையே. மத அரசியலை முற்றிலும் ஒழிக்கும் ஒரே மருந்தும் வர்க்க அரசியலே.
இந்திய அரசியலில் இடது சாரிகளின் பாத்திரத்தை நாடாளுமன்ற, சட்டமன்ற எண்ணிக்கையில் மட்டுமல்ல வர்க்கப்போராட்டங்களின் கள வலிமையையும் சேர்த்து பார்க்க வேண்டும்.
தமிழ் மார்க்ஸ் குழு