மிகப்பெரிய சிறுபான்மை இனக்குழு : சுவாங் -அ.பாக்கியம்
சீனாவில் இருக்கக்கூடிய 55 இன சிறுபான்மை மக்களில் அதிக மக்கள் தொகை கொண்டிருக்கக்கூடிய இனமாக சுவாங் இனம் இருக்கிறது. இந்த இனம் சீன வரலாற்றில் முக்கிய பங்காற்றி இருக்கிறது.
1949 ஆம் ஆண்டு சீனப் புரட்சி வெற்றி பிறகு 1958 ல் இந்த இன மக்களுக்காக குவாங்சி சுவாங் தன்னாட்சி மாகாணம் அமைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சுவாங் இன மக்கள் 1.96 கோடியாக இருக்கிறார்கள். இது ஹுய் (1.14 கோடி), உய்குர் (1.18 கோடி), மியாவ் (1.11 கோடி) போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள இனசிறுபான்மை குழுக்களைவிட கணிசமாக அளவு அதிகமாகும்.
இன இணைப்பின் அடையாளம்
இந்த இன மக்கள் முதன்மையாக குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியில் (சுமார் 85% பேர்) அதிகம் வசிக்கின்றனர். மேலும், யுன்னான், குவாங்டாங், குயிசூ மற்றும் ஹுனான் மாகாணங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் வசிக்கின்றனர். குவாங்சி மாகாணத்தில் சுவாங் இன மக்கள் அதிகமாக வாழ்வதால் இதற்கு குவாங்சி சுவாங் தன்னாட்சிப் மாகாணம் என்று பெயரிடப்பட்டது. சுவாங் இன மக்கள் இந்த மாகாணத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 32.49 சதவிகிதம் உள்ளனர். மொத்த சுவாங் இனமக்களில் 85 சதவிகிதம் இங்கு தான் வாழ்கின்றனர். குவாங்ஷியில் ஜுவாங், ஹான், யாவோ, மியாவோ, டோங் உள்ளிட்ட 12 பூர்வீக இனங்களுடன், மொத்தம் 44 வேறு இனங்களும் வாழ்கின்றன.
இது பல வேறுபட்ட கலாச்சாரங்கள் ஒன்றாக வாழும் இடமாகும். குவாங்ஷியை ஒரு தனி இனத்திற்கான பகுதியாகப் பிரிக்காமல், அனைத்து இனங்களும் ஒன்றாக இணைந்து வாழும் ஒரு பகுதியாக இருப்பதே இதன் சிறப்பம்சமாகும். இந்த “இணைப்பு” என்ற கொள்கை, அனைத்து இன மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நல்லிணக்கத்திற்கு உகந்தது என்று கருதப்பட்டது.
சுவாங் இன மக்கள் தற்போது தன்னாட்சி பகுதியாக ஒதுக்கப்பட்டுள்ள இதே இடங்களில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகிறார்கள். இந்தப் பகுதி முதன் முதலாக பொ.ஆ.மு. 221 இல் சின் பேரரசின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது. சுவாங் என்ற பெயர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்தது மட்டுமல்ல சின் பேரரசால் அங்கீகரிக்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்பு இவர்கள் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டார்கள். இந்த மக்கள் வாழ்ந்த பகுதியில் காடுகளை அழித்து எரித்து சாம்பலாக்கி அதன் பிறகு சாகுபடி செய்து வாழ்வதும், வேட்டையாடுவது உட்பட பழமையான பொருளாதார முறைகளையே கடைப்பிடித்து வந்தார்கள்.
இங்கு நிலவிய சமூக அமைப்பு முறை நிலபிரபுத்துவ அடிமை முறையாக இருந்தது. மக்கள் பரம்பர நில உரிமையாளர்கள், குத்தகை விவசாயிகள், வீட்டு அடிமைகள் என்று மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டனர். 1911 ஆம் ஆண்டு சன்யாட்சன் தலைமையிலான குடியரசு புரட்சி நடைபெற்ற பிறகு இந்த முறைகள் ஒழிக்கப்பட்டது. டாங் வம்சம் துவங்கி கிங் வம்சம் வரையிலும் சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய ஆட்சியின் கீழ் சுவாங் இருந்தாலும் ,சுவாங் இன உள்ளூர் தலைவர்களின் ஆட்சியின் கீழ்தான் அந்த மக்கள் ஆளப்பட்டார்கள். அந்த உள்ளுர் ஆட்சியாளர்கள் மக்களை ஒடுக்கி சுரண்டினார்கள். இதனால் இந்தப் பகுதியில் நூற்றுக் கணக்கான கிளர்ச்சிகள் உருவாகிக் கொண்டே இருந்தது.
அந்நிய படையெடுப்பிற்கு எதிராக சுவாங்
1851-ல், சீன வரலாற்றிலேயே மிகப்பெரிய விவசாயிகளின் எழுச்சியான தைப்பிங் புரட்சி, இந்தப் பகுதியில் வெடித்தது. ஆயிரக்கணக்கான சுவாங் இனத்தவர் தைப்பிங் இராணுவத்தில் இணைந்து, அதன் வடக்கு நோக்கிய அணிவகுப்பில் முன்னனியில் செயல்பட்டது மட்டுமல் அதன் முதுகெலும்பாகம் விளங்கினார்கள். அவர்களில் பலர் அந்த இராணுவத்திற்கு தலைமையேற்றது மட்டுமல்ல தைப்பிங்கின் தேவராஜ்யத்திற்கும் முக்கியமான தலைவர்களாக மாறினார்கள்.
சீனாவின் தெற்கு எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த சுவாங் மக்கள், அந்நாட்டின் நிலப்பரப்பைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளனர். 1070-களில், அவர்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களை விரட்டியடித்தனர். 16-ஆம் நூற்றாண்டின் மத்தியில், படையெடுத்து வந்த ஜப்பானிய கடற்கொள்ளையர்களைத் தோற்கடித்தனர்.
19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சுப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறி சீனாவை ஆக்கிரமித்தன. குவாங்சியில் உள்ள சுவாங் மற்றும் ஹான் இன மக்கள் கருப்புக் கொடிப் படையை உருவாக்கி, 1873 இல் ஹனோய் அருகே பிரெஞ்சுப் படையெடுப்பாளர்களைத் தோற்கடித்தனர். அவர்கள் 1882 இல் மீண்டும் ஹனோயில் பிரெஞ்சுக்காரர்களைத் தோற்கடித்தனர்.
1885-ல் பிரெஞ்சுப் படையெடுப்பாளர்கள் சீனாவிற்குள் மீண்டும் ஊடுருவிய போது, உள்ளூர் சுவாங் மற்றும் ஹான் மக்கள், சீன-வியட்நாம் எல்லையில் உள்ள ஜென்னங்குவான் கணவாயில் சீன இராணுவம் ஒரு முக்கியமான வெற்றியைப் பெற சுவாங் இன மக்கள் உதவினர்.
டாக்டர் சன் யாட்-சென் தலைமையிலான சீனாவின் முதல் ஜனநாயகப் புரட்சியான 1911 ஆம் ஆண்டுப் புரட்சிக்கு சுவாங் மக்கள் பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். டாக்டர் சன்யாட்-சென் தனது புரட்சிகர நோக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உருவாக்கிய அமைப்பான டோங் மெங் ஹுய்யில் பல சுவாங் குடும்பத்தினர் முக்கிய உறுப்பினர்களாக ஆனார்கள்.
சுவாங் மக்கள் டாய் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த சுவாங் மொழியைப் பேசுகிறார்கள். இந்த மொழிக்கு வடக்கு மற்றும் தெற்கு என இரண்டு முக்கிய கிளைமொழிகள் உள்ளன. வேறுபட்ட மொழியியல் உறவுகள் இருந்தது. இவர்களது மொழி, வடக்கு தாய் மொழிகளில் பூயி மொழியுடனும், தெற்கு கிளை வியட்நாமின் நுங் மற்றும் தேய் மொழிகளுடனும் நெருங்கிய தொடர்புடையது. இவர்களின் எழுத்து முறை பண்டைய சுவாங் எழுத்துக்கள். இவைசீன எழுத்துக்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்டவை. இது தெற்கு சாங் வம்சத்தின் போது தோன்றின. ஆனால் அவை ஒருபோதும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1955 ஆம் ஆண்டில், சீன அரசு லத்தீன் எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையை உருவாக்க உதவியது, இது இன்றும் பயன்பாட்டில் உள்ளது.
பல்லின கடவுள் கொள்கை
சுவாங் மக்கள் மோ மதம் எனப்படும் ஒரு தனித்துவமான பூர்வீக நம்பிக்கையைப் பின்பற்றுகிறார்கள். இது அவர்களின் ஆன்மீக மற்றும் அன்றாட வாழ்க்கையை ஆழமாக வடிவமைக்கிறது. அவர்களின் பாரம்பரிய மத நடைமுறைகள் பொதுவாக பல்லினக் கடவுட் கொள்கை (பாலித்தீசம்) என்று விவரிக்கப்படுகின்றன. இதில் மூதாதையர் வழிபாடு மற்றும் இயற்கை, ஆன்மாக்களை வணங்குதல் ஆகியவை அடங்கும். பல்வேறு ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களின் கலவையாக உள்ளது. இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டுடன், பல ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களும் சுவாங் இன சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தாங் வம்சத்திலிருந்து (கி.பி. 618-907) தாவோயிசமும், பௌத்தமும் சுவாங் இனத்தவர் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் கத்தோலிக்க, கிறிஸ்தவ மிஷனரிகள் இப்பகுதிக்கு வந்தனர். இருப்பினும், அவர்களின் செல்வாக்கு பெரும்பாலும் நகர்ப்புறங்களில் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. மொத்த மதப் பின்பற்றுவோரின் எண்ணிக்கை சுமார் 5.5 லட்சமாகும்.
சுவாங் இன மக்களின் மதவழிபாட்டு முறைகள், இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாட்டில் வேரூன்றிய பழங்கால நம்பிக்கைகள் தொடங்கி, வெவ்வேறு காலகட்டங்களில் வந்த பௌத்தம், தாவோயிசம், கிறித்தவம் போன்ற சமயங்களின் தாக்கங்களை உள்வாங்கி, தனித்துவமான கலாச்சார அடையாளத்தை உருவாக்கியுள்ளன.
சுவாங் மக்கள் பண்பாட்டு ரீதியாக வளமானவர்கள் மற்றும் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தவர்கள். அவர்களின் மரபுகள், சிக்கலான ப்ரோகேட் (வாரணாசி பட்டு மற்றும் காஞ்சிபுரம் புடவைகள் போன்று) துணிகள் முதல் துடிப்பான பாடல் காட்சிகள் வரை, சீனாவின் பல்வேறுபட்ட பண்பாட்டு நிலப்பரப்பின் முக்கியமான கூறுகளாகும். சீனா எல்லையைத் தாண்டி, வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள தாய் மொழி பேசும் மக்களுடன் (தாய், லாவோ, ஷான், நுங்) சுவாங் மக்கள் வரலாற்று மற்றும் மொழியியல் உறவைக் கொண்டுள்ளனர்.
சுவாங் இனக்குழு, ஒரு ஒருங்கிணைந்த மக்கள் குழுவாக, நவீன சீன அரசால் உருவாக்கப்பட்ட ஒரு அடையாளமாக கருதப்படுகிறது. 1950 களுக்கு முன், இந்த மக்கள் பல்வேறு உள்ளூர் பெயர்களில் அழைக்கப்பட்டனர். ஒரு பொதுவான இன உணர்வு பெரும்பாலும் இல்லாமல் இருந்தது. பிற தென்கிழக்காசிய இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது, சுவாங் மக்கள் நவீன சீனாவின் பிரதான ஹான் கலாச்சாரத்தில் அதிக அளவில் ஒருங்கிணைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள்.
கல்வியும் பொருளாதாரமும்
ஒரு ஆய்வின் படி, சுவாங் மக்களின் சராசரி கல்வி ஆண்டுகள் 8.12 ஆகும். இது கொரியர் (10.25) மற்றும் மங்கோலியர் (9.17) போன்ற குழுக்களைவிட குறைவாகவும், திபெத்தியர் (5.33), யி (6.49), மற்றும் மியாவ் (7.17) போன்றவற்றை விட அதிகமாகவும் உள்ளது. சுவாங் மொழியைப் பாதுகாக்கவும், வளர்க்கவும், இருமொழிக் கல்வி (Zhuang-Mandarin Bilingual Education) முக்கிய வழிமுறையாகப் பயன்படுத்தப்படுகிறது. 1980களில் இருந்தே பல பள்ளிகளில் இருமொழிக் கல்வி அமல்படுத்தப்பட்டு வருகிறது. சுவாங் மொழி ஆசிரியர்கள் மற்றும் மொழிப் பணியாளர்களைப் பயிற்றுவிக்க சிறப்புப் பள்ளிகளும் நிறுவப்பட்டன. 1950 களில், சுமார் 3 மில்லியன் சுவாங் மக்கள் எழுத்தறிவு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்றனர். தற்போது, குவாங்ஷியில் 269 இருமொழிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
பல இன மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் வழக்குரைஞர் அலுவலகங்கள், வழக்குகளை விசாரிக்கும் போது உள்ளூர் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன. மேலும், மாண்டரின் மற்றும் உள்ளூர் மொழிகள் இரண்டிலும் தேர்ச்சி பெற்ற ஊழியர்களை நியமிக்கவும் ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த முயற்சிகள் இருந்தபோதிலும், நடைமுறையில் சில சவால்களும் உள்ளன. தரப்படுத்தப்பட்ட சுவாங் மொழி வூமிங் (Wuming) மாவட்டத்தின் பேச்சு வழக்கை அடிப்படையாகக் கொண்டது. இது வடக்கு மற்றும் தெற்கு சுவாங் வழக்குகளிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருப்பதால், பல மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் இதைக் கற்க கடினமாக உள்ளது என்று கருதுகின்றனர். சில மாணவர்கள், தாங்கள் படித்த தரப்படுத்தப்பட்ட சுவாங்கை தங்கள் குடும்பத்தினரிடம் பேசும்போது அவர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
சிறுபான்மை இன மொழிகளைப் பாதுகாக்கும் அரசின் கொள்கைகள் இருந்தாலும், மாண்டரின் மொழி கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளுக்கு அவசியமாகக் கருதப்படுவதால், பல குடும்பங்கள் தங்கள் பிள்ளைகள் மாண்டரின் மொழியிலேயே சிறந்து விளங்குவதில் அக்கறை காட்டுகின்றனர். இதனால், சுவாங் மொழியைக் கற்கும் ஆர்வம் சில சமயங்களில் குறைவதாகவும் கூறப்படுகிறது.
தரப்படுத்தப்பட்ட எழுத்து முறை சீன மக்கள் குடியரசால் உருவாக்கப்பட்டது. சுவாங் மொழிக்கு நீண்ட காலமாக ஒரு நிலையான எழுத்து முறை இல்லாத நிலையில், 1957 ஆம் ஆண்டு ரோமன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு புதிய எழுத்து முறை உருவாக்கப்பட்டது. பின்னர், 1982 ஆம் ஆண்டில் இது 26 லத்தீன் எழுத்துகளை அடிப்படையாகக் கொண்டு மேலும் சீர்திருத்தம் செய்யப்பட்டு, தற்போதைய தரப்படுத்தப்பட்ட சுவாங் எழுத்து முறையாக அறியப்படுகிறது.
குவாங்ஷி இப்போது நாட்டின் முக்கிய கரும்பு மற்றும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி மையமாக உள்ளது. இதன் கரும்பு உற்பத்தி நாட்டின் மொத்த உற்பத்தியில் 60% க்கும் அதிகமாகும். மேலும் பட்டு புழு வளர்ப்பு உற்பத்தி நாடு முழுவதும் முதலிடத்தில் உள்ளது. இது விவசாயிகளின் வருமானத்தை பெரிதும் அதிகரித்துள்ளது. குவாங்ஷியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2012 இல் 1.30 டிரில்லியன் யுவானிலிருந்து 2025 இல் 2.97 டிரில்லியன் யுவானாக உயர்ந்துள்ளது. இது பொருளாதார வலிமையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டுகிறது. இன விவகாரங்களில் சட்ட முறைமையை வலுப்படுத்துதல் முக்கிய நிகழ்வாக மாறியுள்ளது. குவாங்ஷி இன விவகாரங்கள் தொடர்பான பல உள்ளூர் சட்டங்களையும், அரசு ஒழுங்குமுறைகளையும் உருவாக்கியுள்ளது. இது உள்ளூர் பண்புகளைக் கொண்ட இனப் பணிகளுக்கான முறையான அமைப்பை உருவாக்கியுள்ளது.
அனைத்து இனங்களையும் ஒன்றாக நவீன சோசலிசத்தை நோக்கி இட்டுச் செல்வது; மேலும், வளர்ச்சியின் பாதையில் “எந்த ஒரு இனமும் பின்தங்கியிருக்கக் கூடாது” என்பதை உறுதி செய்வது என்பது தான் சீன சோஷலிசத்தின் பாதையாக மாறியுள்ளது.
அ.பாக்கியம்