இடதே வளர்ச்சி! இடதே மாற்று!-சுதிர்
இன்றைய நவீன உலகில், லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவக் கொள்கைகளுக்கு மத்தியில், மானுட மேம்பாட்டையும் சமத்துவத்தையும் முன்னிறுத்தும் கம்யூனிஸ்ட்டுகளின் ‘இடதுசாரி மாற்று’ மிக முக்கியமான பேசு பொருளாக வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாடுகள் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவும் தங்களின் பொருளாதார ஆதிக்கத்திற்காகவும் தொடுத்து வரும் போர்களுக்கு இடையில் “உழைக்கும் மக்கள்” எனும் கம்யூனிஸ்ட்டுகளின் தத்துவத்தின் அடிப்படையில் கேரளா முதல் கியூபா, சீனா வரை கம்யூனிஸ்ட் அரசுகள் படைத்து வரும் சாதனைகள், வளர்ச்சி என்பது வெறும் எண்கள் சார்ந்தது மட்டுமல்ல, அது மக்களின் வாழ்க்கைத் தரம் சார்ந்தது என்பதை நிரூபிக்கின்றன.
கேரளாவின் இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசின் ‘இடதுசாரி மாற்று’ இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. பொதுக் கல்வி மற்றும் பொதுச் சுகாதாரத்தில் கேரளா அடைந்துள்ள வளர்ச்சி சர்வதேசத் தரம் வாய்ந்தது.
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” : வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த இ.எம்.எஸ் அரசு
கேரளாவின் இன்றைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும், சமூக நீதிக்கும் அடிப்படை 1957 இல் உலகின் முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு கொண்டு வந்த நிலச் சீர்திருத்தச் சட்டம் ஆகும்.
“உழுபவனுக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கத்தோடு கொண்டுவரப்பட்ட இச்சட்டம், பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த நிலப்பிரபுத்துவ முறையை வேரோடு அறுத்தது. நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கும், குத்தகைதாரர்களுக்கும் நில உரிமை வழங்கப்பட்டதன் மூலம், ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக அந்தஸ்தைப் பெற்றனர். இதுவே பிற்காலத்தில் கேரளா கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதன்மை மாநிலமாக உருவெடுக்க வலுவான அடித்தளமாக அமைந்தது.
தீவிர வறுமை ஒழிப்பு: எல்.டி.எப் அரசின் தன்னிகரற்ற மாபெரும் சாதனை
முந்தைய இடதுசாரி அரசுகள் நிலச் சீர்திருத்தத்தின் மூலம் வறுமையின் வேரை அறுத்த நிலையில், தற்போதைய பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி (LDF) அரசு “தீவிர வறுமை ஒழிப்பு” (Extreme Poverty Eradication) திட்டத்தின் மூலம் வறுமையை முழுமையாகத் துடைத்தெறியும் இறுதிக்கட்டப் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவிலேயே மிகக்குறைந்த வறுமை விகிதம் (0.7%) கொண்ட ஒரே மாநிலம் கேரளா என்ற போதிலும், எஞ்சியுள்ள மிக ஏழ்மையான குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்குத் தனித்தனியாக நுண்-திட்டங்களை (Micro-plans) அரசு வகுத்துள்ளது.
உணவு, இருப்பிடம், சுகாதாரம் மற்றும் வருமானம் ஆகிய நான்கு அம்சங்களை உறுதி செய்வதன் மூலம், “வறுமையற்ற கேரளா” என்ற இலக்கை நோக்கி இடதுசாரி அரசு பீடு நடை போடுகிறது. இது மற்ற மாநிலங்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் ஒரு மாபெரும் சமூகப் புரட்சியாகும்.
கூட்டுறவுத் துறை: மக்களின் கையில் பொருளாதாரம்
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் மிகப்பெரிய பலம் அதன் வலுவான கூட்டுறவு இயக்கமாகும். கார்ப்பரேட் வங்கிகள் எட்டாத கிராமப்புறங்களிலும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் அடித்தட்டு மக்களுக்குப் பொருளாதாரப் பாதுகாப்பை இடதுசாரி அரசு உறுதி செய்துள்ளது.
கேரளா வங்கி:
மாநிலத்தின் கூட்டுறவு வங்கிகளை ஒன்றிணைத்து ‘கேரளா வங்கி’யை உருவாக்கியதன் மூலம், மாநிலத்தின் சொந்த மூலதனத்தைக் கொண்டு பிரம்மாண்டமான வங்கிச் சேவையை அரசு வழங்குகிறது.
விவசாயம் மற்றும் நுகர்வோர் கூட்டுறவு:
விவசாயிகளுக்கான கடன் உதவிகள், நியாய விலைக் கடைகள் (Consumerfed) மற்றும் ‘நீதி’ மருந்தகங்கள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருந்துகள் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைப்பதை இடதுசாரி அரசு உறுதி செய்கிறது.
நெறிமுறை சார்ந்த பொருளாதாரம்:
தனியார் நிதி நிறுவனங்களின் சுரண்டலில் இருந்து மக்களைக் காக்க, கூட்டுறவுத் துறை ஒரு கவசமாகச் செயல்படுகிறது.
பொதுக்கல்விப் பாதுகாப்பு இயக்கம்:
அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்தி, நவீன் தொழில்நுட்பங்களுடன் கூடிய வகுப்பறைகளை உருவாக்கியதன் மூலம், தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்குத் திரும்பும் புரட்சியை கேரளா நிகழ்த்தியுள்ளது.
மேம்பட்ட சுகாதார கட்டமைப்பு: அடிமட்ட அளவில் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்படுத்தியதன் மூலம், நிபா, கோவிட்-19 போன்ற பேரிடர் காலங்களில் உலகமே வியக்கும் வகையில் கேரளா செயல்பட்டது.
‘லைஃப் மிஷன்’ (LIFE Mission) திட்டம்:
பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்களுக்குத் தார்மீக உரிமையான சொந்த வீட்டை அரசு கட்டிக் கொடுத்துள்ளது.மக்களை உள்ளடக்கிய உள்ளாட்சி அதிகாரம்: அதிகாரப் பரவலாக்கல் மூலம் திட்டமிடலில் மக்களின் பங்களிப்பை உறுதி செய்வதில் கேரளா முதலிடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் இடதுசாரிகளின் எழுச்சி
உலக அரங்கில் சீனா, வியட்நாம் மற்றும் கியூபா போன்ற கம்யூனிஸ்ட் ஆளும் நாடுகள் வியக்கத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளன.
1. மக்கள் சீனம்: வறுமை ஒழிப்பில் ஒரு வரலாற்றுச் சாதனை
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கடந்த சில தசாப்தங்களில் சுமார் 80 கோடி மக்களைக் கடும் வறுமையிலிருந்து மீட்டுள்ளது. இது மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாகும். அதிநவீன உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வலுவான அடித்தளம் ஆகியவற்றுடன் சீனா இன்று உலகின் மாபெரும் பெரிய பொருளாதார சக்தியாக உயர்ந்துள்ளது.
2. வீர வியட்நாம்: மீண்டெழுந்த பொருளாதாரம்
போரினால் சிதைந்த ஒரு நாடு, கம்யூனிஸ்ட் கொள்கைகளின் துணையுடன் இன்று ஆசியாவின் உற்பத்தி மையமாக மாறியிருப்பது வியப்புக்குரியது. கல்வி மற்றும் சுகாதாரத்தில் அரசு செய்த முதலீடுகளே அதன் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்குக் காரணமாகும். பாதுகாப்பான சுற்றுலாவிற்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குகிறது.
3. சோசலிச கியூபா: தடைகளைத் தாண்டிய மனிதாபிமானம்
அமெரிக்காவின் கடும் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியிலும், கியூபா தனது மக்களுக்கு இலவச மற்றும் உயர்தர சுகாதாரத்தையும், கல்வியையும் வழங்கி வருகிறது. கியூபாவின் மருத்துவர்கள் உலகெங்கும் பேரிடர் காலங்களில் சென்று சேவை செய்வது “இடதுசாரி மனிதாபிமானத்தின்” உச்சமாகும்.
ஏன் இடதே மாற்று?
முதலாளித்துவ நாடுகளில் செல்வம் ஒரு சில நபர்களிடம் மட்டுமே குவிகிறது.
ஆனால், இடதுசாரி அரசுகள்:
- சமத்துவத்தை வலியுறுத்துகின்றன.
- பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்து, அவை மக்களுக்குச் சேர்வதை உறுதி செய்கின்றன.
- தொழிலாளர் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கின்றன.
சுற்றுச்சூழல் சீர்கேடு, வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த இன்றைய உலகில், இடதுசாரிச் சிந்தனைகளே நம்பிக்கையூட்டும் தீர்வாக உள்ளன.மக்களின் அடிப்படைத் தேவைகளை வணிகமாக்காமல், அவற்றை உரிமைகளாக வழங்குவதே உண்மையான வளர்ச்சி.
கேரளா காட்டும் பாதையும், உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் அரசுகளின் சாதனைகளும் “இடதே வளர்ச்சி, இடதே மக்களுக்கான மாற்று” என்பதை உரக்கச் சொல்கின்றன.
– சுதிர்