Tamil Marx

அரசியல் விமர்சனம் இந்தியா

பிஎம்ஸ்ரீ திட்டமும் கேரளாவின் நிலைப்பாடும் – வி. சிவன்குட்டி

பிஎம்ஸ்ரீ திட்டமும் கேரளாவின் நிலைப்பாடும் – வி. சிவன்குட்டி
  • PublishedOctober 28, 2025

ஒன்றிய அரசு, பிஎம் ஸ்ரீ (இந்தியாவை வளர்ப்பதற்கான பிரதமர் பள்ளிகள்) என்கிற திட்டத்தை நாடு முழுவதும் கட்டாயமாகச் செயல்படுத்தி வருகிறது. இதை ஏற்காத மாநிலங்களுக்குக் கல்விக்கான நிதி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பின்னணியில் கேரளம் பிஎம் ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டுள்ளது.இதுகுறித்து கேரள கல்வித்துறை அமைச்சர் வி. சிவன்குட்டி செய்தியாளர்களிடம் பேசியது:

1.)ஏன் இந்த முடிவு?

ஒன்றிய அரசால் தொடங்கப்பட்ட பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கேரளா கையெழுத்திட முடிவு செய்தது குறித்துச் சில தரப்பினரிடமிருந்து சில கவலைகள் எழுப்பப்படுவது கவனிக்கப்பட்டது. இந்த முடிவு ஏன் எடுக்கப்பட்டது மற்றும் அது கேரளாவின் பொதுக் கல்விக்கொள்கைகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துவதற்காகவே இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது.

நமது குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மத்திய நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் கேரளாவை நிதி ரீதியாக நசுக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை முறியடிப்பதற்கான ஒரு முடிவு இது. கேரளாவின் பொதுக் கல்வித் துறையை அழிக்க எந்த நடவடிக்கையையும் இந்த அரசு அனுமதிக்காது. அதே நேரத்தில், நமது குழந்தைகளுக்குத் தகுதியான ஒரு ரூபாயைக் கூட இழக்கத் தயாராக இல்லை.

2.)இப்போது ஏன் கையெழுத்திட்டது?

பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திடாததற்காகச் சமக்ரசிக்சா திட்டத்திற்குக் கேரளாவிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்தது. அதன்படி, 2023-24 ஆம் ஆண்டில், கேரளா ரூ.188 கோடியே 58 லட்சம் இழந்தது. 2024-25 ஆம் ஆண்டிற்கான நிலுவைத்தொகை ரூ.513 கோடியே 54 லட்சம். 2025-26 ஆம் ஆண்டிற்குக் கிடைக்கவிருந்த ரூ.456 கோடியே 01 லட்சம் நிலுவைத் தொகையும் நிறுத்தி வைக்கப்பட்டது. நாங்கள் ஏற்கனவே மொத்தம் ரூ.1,158 கோடியே 13 லட்சம் இழந்து விட்டோம். பிஎம் ஸ்ரீ திட்டம் மார்ச் 2027-ல் முடிவடையும். இப்போது கையெழுத்திடுவதன் மூலம், மாநிலத்திற்கு ரூ.1,476 கோடியே 13 லட்சம், அதாவது சமக்ரசிக்சாவின் நிலுவைத் தொகை மற்றும் இரண்டு ஆண்டு பிஎம் ஸ்ரீ நிதி உள்படக் கிடைக்கும். தற்போது, ஒன்றிய அரசு சமக்ர சிக்சாவிற்கு ரூ.971 கோடி வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது.

3.)இந்த நிதியை நிறுத்தி வைப்பதால் யார் யார் பாதிக்கப்படுவார்கள்?

இது நமது பொதுப் பள்ளிகளில் சுமார் 40 லட்சம் எண்ணிக்கையிலான விளிம்பு நிலையைச் சேர்ந்த குழந்தைகளை நேரடியாகப் பாதிக்கிறது. 5 லட்சம் பட்டியல் சாதி/பழங்குடி இனக் குழந்தைகளுக்கான சலுகைகள், 1.08 லட்சம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு ஆதரவு, சிகிச்சை வசதிகள் மற்றும் உதவி சாதனங்களும் பாதிக்கப்படும். இந்த நிதியின் பற்றாக்குறை,கல்வி உரிமைச் சட்டத்தின்படி இலவச சீருடைகள், பாடப்புத்தகங்கள், பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவிகள், முன் தொடக்கக் கல்வி, ஆசிரியர் பயிற்சி மற்றும்தேர்வு நிர்வாகம் போன்ற பொதுக் கல்வி நடவடிக்கைகளின் முதுகெலும்பையே முறித்து வருகிறது.

நமது குழந்தைகளின் எதிர்காலத்துடன் விளையாடும் அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிய கேரளம் தயாராக இல்லை. இந்த நிதி எந்த ஒரு கட்சியின் தாராள மனப்பான்மையாலும் கிடைப்பது அல்ல, மாறாக,இது கேரள மக்களின் வரிப் பணத்திலிருந்து நமது குழந்தைகளின் உரிமையான பங்காகும். அந்த உரிமையை அடைவது என்பதே ஒரு மக்களுக்கான அரசாங் கத்தின் பொறுப்பு.

விமர்சனங்களுக்கான பதில்

விமர்சனம் 1:பி.எம். ஸ்ரீ யில் கையெழுத்திட்டதன் மூலம்,கேரளம் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

உண்மை நிலை:

இது முற்றிலும் தொழில்நுட்ப ரீதியிலானது. முதலாவதாக, 2022 அக்டோபர் முதல், தேசிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கான ஒரு வழிமுறையாகச் சமக்ர சிக்சா திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்தது. 2023 வரை அந்த நிதியைப் பெற்றாலும், கேரளம் நமது மாநில நலன்கள் மற்றும் கல்வி மதிப்புகளுக்கு ஏற்பவே திட்டங்களைச் செயல்படுத்தியது. இப்போதும் அதே கொள்கை மட்டுமே தொடர்கிறது.

இரண்டாவதாக, உயர்கல்வித் துறை பி எம் உஷா திட்டத்தில் தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தலாம் என்ற நிபந்தனையுடனேயே கையெழுத்திட்டது. இருப்பினும், கேரள உயர்கல்வி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் நமது சொந்தமான திட்டமே இங்கு செயல்படுத்தப்படுகிறது. ஒன்றியக் கொள்கை முப்பது சதவிகிதம் கூட இங்கு செயல் படுத்தப்படவில்லை.

மூன்றாவதாக, தேசிய கல்விக் கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல விஷயங்கள் (உதாரணமாக: முன் தொடக்கக் கல்வி, ஆசிரியர் அதிகாரமளித்தல், 100 சதவிகிதம் சேர்க்கை, மும்மொழித் திட்டம்) பல தசாப்தங்களுக்கு முன்பே கேரளாவால் செயல்படுத்தப் பட்டன. இந்த விஷயத்தில், நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை விட மிகவும் முன்னால் இருக்கிறோம்.

விமர்சனம் 2: பாடத்திட்டத்தை வகுப்புவாதம் ஆக்குவதற்கான கதவை திறக்கிறீர்களா?

உண்மை நிலை:

கேரள அரசு தான் கேரளப் பாடத்திட்டத்தைத் தீர்மானிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையின் பக்கம் 17-ல் பிரிவு 4/32-ல், பாடத்திட்டம் தொடர்பான இறுதி முடிவு மாநில அரசுகளிடம் உள்ளது என்று தெளிவாகக் கூறுகிறது. புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்ததிலிருந்து 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தையும் பாடப்புத்தகங்களையும் திருத்தியமைத்த ஒரே மாநிலம் கேரளம்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தைத் திருத்தியமைப்பதன் மூலம் மதச்சார்பின்மை, அறிவியல் சிந்தனை மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளில் கவனம் செலுத் தும் பாடத்திட்டத்தை நாம் செயல்படுத்தியுள்ளோம். NCERT ஆல் குறைக்கப்பட்ட காந்தி படுகொலை மற்றும் முகலாய வரலாறு உள்ளிட்ட கூடுதல் பாடப்புத்தகங்களை குழந்தைகளுக்குக் கற்பித்து, மேலும் அவற்றில் தேர்வுகளை நடத்திய மாநிலம் கேரளம். கேரளத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் தொடர்ந்து கற்பிக்கப்படும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

விமர்சனம் 3: கூட்டாட்சி கொள்கைகளை கைவிடுகிறீர்களா?

உண்மை நிலை:

இந்த முடிவு கூட்டாட்சிக் கொள்கைகளுக்கான போராட்டத்தின் ஒரு பகுதியாகும். தில்லியில் நடைபெற்ற NCERT பொதுக்குழு கூட்டத்தில், 20 மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்கள் கலந்துகொண்டபோதிலும், கேரளக் கல்வி அமைச்சர் மட்டுமே ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளுக்கு எதிராகப் பேசினார்..

அரசு நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களை வகுப்புவாதமாக்கும் ஆளுநர் மாளிகையின் நடவடிக்கையை நேரடியாக எதிர்த்த மற்றும் விழாவைப் புறக்கணித்த ஒரே கல்வி அமைச்சர் கேரளாவைச் சேர்ந்தவர். மத்திய-மாநிலஉறவுகள் மற்றும் ஆளுநரின் அதிகாரங்கள் குறித்து நமது பாடப்புத்தகங்களில் சேர்ப்பதன் மூலம் அரசமைப்பு மதிப்புகளை நிலைநிறுத்தத் துணிச்சலைக் காட்டிய மாநிலம் கேரளம். நிதியை நிறுத்தி வைப்பதன் மூலம் மாநிலங்களை மூச்சுத் திணறடிப்பது ஒன்றிய அரசுதான். அந்த நிதித் தடையை நாம் கடந்து நமது உரிமைகளை அடைகிறோம்.

விமர்சனம் 4: பள்ளி வளாகங்கள் என்ற பெயரில் சிறிய பள்ளிகள் மூடப்படுமா?

உண்மை நிலை:

ஒரு பள்ளி கூட மூடப்படாது. இந்தக் கவலைக்கு எந்த அடிப்படையும் இல்லை. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு (UDF) மூட முடிவு செய்த பள்ளிகளைக் கைப்பற்றி காப்பாற்றிய அரசு இது. இதன் விளைவாக, பொதுக்கல்விப் பாதுகாப்புத் திட்டம் மூலம் 9 ஆண்டுகளில் 11 லட்சம் புதிய குழந்தைகளை மீண்டும் அரசுப் பள்ளிகளுக்குக் கொண்டு வந்தது. இந்த அரசு பள்ளிகளை மூடுவதற்குப் பணத்தைப் பயன்படுத்தவில்லை, மாறாக ஏற்கனவே உள்ள பள்ளிகளைச் சிறந்த மையங்களாக மாற்றுகிறது.

விமர்சனம் 5: இந்தத் திட்டம் பிரதமரின் பெயரில் செயல்படுத்தப்படுகிறது.

உண்மை நிலை:

இது மத்திய நிதியுதவி பெறும் திட்டங்களின் பொதுவான நடைமுறை மட்டுமே. தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளின் பெயருக்கு முன்னால் ‘பிஎம் ஸ்ரீ’ என்று சேர்க்கப்பட வேண்டும் என்பதே நிபந்தனை. பிரதமரின் பெயர் அல்லது படம் வைக்கப்பட வேண்டும் என்று இதற்குப் பொருளல்ல. மதிய உணவுத் திட்டத்தை பிரதமர் போஷன் என்றும், உயர்கல்வித் திட்டத்தை பி எம் உஷா என்றும் நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.

மொத்த 82 மத்திய திட்டங்களில், 17 திட்டங்கள் ‘பி எம்’ எனத் தொடங்குகின்றன. கல்வித் துறையிலேயே 6 திட்டங்கள் உள்ளன. இது வெறும் குறியீடு, அவ்வளவே. அதன் பெயரில் நமது 40 லட்சம் குழந்தைகளுக்குச் சலுகைகளை மறுப்பது குற்றவியல் அலட்சியமாகும். கல்வி மூலம் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சி நிரலைச் செயல்படுத்தும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிரான கேரளாவின் போராட்டம் தொடரும்.

ஆனால் மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் போது, நாம் பெற வேண்டிய ரூ.1,400 கோடிக்கு மேல் நிதியை மறுப்பதன் மூலம் இந்த அரசாங்கம் நம் குழந்தைகளை நெருக்கடியில் சிக்க வைக்க முடியாது. பிஎம் ஸ்ரீ திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டாலும், கேரளப் பொதுக்கல்வியின் முதுகெலும்பாக இருக்கும் மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் அறிவியல் உள்ளடக்கத்தில் எந்த சமரசமும் இருக்காது என்று கேரள மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன் என அமைச்சர் தெரிவித்தார்.

“சிவன்குட்டி எங்கள் அமைச்சர், நான் என் தோழரை நம்புகிறேன்”

கேரள மாநிலம் சிபிஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வம்

பி எம் ஸ்ரீ குறித்து பினோய் விஸ்வம் பேட்டி மத்திய அரசு தொடங்கியுள்ள பிரதமர் ஸ்ரீ திட்டம் தொடர்பாகக் கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டியின் வார்த்தைகளை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்வதாக சிபிஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வம் கூறினார். கல்வித்துறையில் ஆர்எஸ்எஸ் கொள்கையின்படி நடக்கும் பாடத்திட்டம் மற்றும் கல்வித் திட்டத்திற்கு அடி பணியக்கூடாது. அதன் தொலைநோக்கு விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேறு எவரையும் விட சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு நன்றாகத் தெரியும்.

தேசிய கல்விக் கொள்கை (NEP) படி பாடத்திட்டம் மற்றும் கல்வித் திட்டம் செயல்படுத்தப்படாது என்ற சிவன்குட்டியின் வார்த்தைகள் நேர்மறையானவை என்று அவர் வெள்ளியன்று செய்தியாளர்களிடம் கூறினார். முன்னதாக பி எம் ஸ்ரீ விஷயத்தில் சிபிஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வம் சில சந்தேகங்களை ஊடகங்களிடம் வெளிப்படுத்தியிருந்தார். அதன் தொடர்ச்சியாக சிபிஎம் , சிபிஐ இடையே கருத்து வேறுபாடுஎழுந்துள்ளதாகவும், இடது ஜனநாயக முன்னணிக்குள் குழப்பம் நிலவுவதாகவும் ஊடகங்கள் செய்தி பரப்பி வந்தன. ஆனால், சிபிஎம், சிபிஐ இடையிலான உறவுகள் வலுவாக உள்ளதாகவும், அவை இடது ஜனநாயக முன்னணியின் தலையாகவும் இதயமாகவும் விளங்குகின்றன என்றும் சிபிஎம் மூத்த தலைவர் ஏ.கே.பாலன் தெரிவித்தார். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் எழுந்தால் முன்னணியில் விவாதித்து ஒத்த கருத்துடன் மட்டுமே பி எம் ஸ்ரீ திட்டம் செயல்படுத்தப்படும் என எல்டிஎஃப் கன்வீனர் தெளிவுபடுத்தி உள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில், சனிக்கிழமை (அக்.25) முற்பகல் அமைச்சர் வி.சிவன்குட்டி சிபிஐ மாநில செயலாளர் பினோய் விஸ்வத்தைச் சிபிஐ அலுவலகத்தில் சந்தித்தார். பின்னர் இருவரும் இடது ஜனநாயக முன்னணியின் உறுத்திப்பாட்டை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

நன்றி தீக்கதிர், (27 oct 2025)

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *