Tamil Marx

இஸ்ரேல்-பாலஸ்தீன போர் சர்வதேசம்

பத்திரிகை சுதந்திரத்தை சுட்டுத் தள்ளும் இஸ்ரேல்-சேது சிவன் 

பத்திரிகை சுதந்திரத்தை சுட்டுத் தள்ளும் இஸ்ரேல்-சேது சிவன் 
  • PublishedAugust 29, 2025

2025 ஆகஸ்ட் 25 அன்று காசாவில் உள்ள நாசர் மருத்துவ மனையில் இஸ்ரேல் நடத்திய இத்தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர் அதில் பத்திரிகையாளர்கள் ஐந்து பேர். இதே போல ஆகஸ்ட் மாதத் துவக்கத்தில் பாலஸ்தீன மக்களின் மீதான தாக்குதலை அம்ப லப்படுத்தி வந்த அல்ஜசீரா ஊடகவியலாளர் அனாஸ் அல்-ஷரீப் உள்ளிட்ட 5 பேரை படுகொலை செய்தது. 2023 அக்டோபர் 7 முதல் காசாவில் சுமார் 247 பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர் என ஐநா மனித உரிமைகள் ஆணை யம் அறிவித்துள்ளது.

நாசர் மருந்துவமனையில் நடந்த படுகொலைக்கு உலகளவில் கண்டனங்கள் எழுந்த வுடன் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலுவலகம், “இஸ்ரேல் பத்திரிகையாளர்களின் பணியை மதிக்கிறது” என்று ஓர் அறிக்கையை வெளியிட்டது. அந்நாட்டு ராணுவத் தளபதியும் இந்த கொலையை திட்டமிட்டு செய்யவில்லை என கூறினார். ஆனால் உண்மையில் என்ன நடந்தி ருக்கும், ஏன் நடந்திருக்கும் என பாலஸ்தீன வரலாற்றை பார்த்தால் புரிந்து கொள்ளலாம்.

பத்திரிகையாளர்களின் மீதான தாக்குதல்கள்  

படுகொலைகளை குறித்தான தரவுகளைச் சேகரிக்கும் பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (Committee to Protect Journalists), “பத்திரிகையாளர்களைக் கொல்லவும், மௌனமாக்கவும் இஸ்ரேல் மிகக் கொடூரமான மற்றும் திட்ட மிட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறது” என்று உரக்கச் சொன்னதுடன் “பாலஸ்தீனப் பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் மிரட்டப்படுகிறார்கள்; நேரடியாக குறிவைத்து படுகொலை செய்யப்படுகிறார்கள்; திடீரென கைது செய்யப்பட்டு சித்ரவதை செய்யப்படுகிறார்கள்” என்றும் கூறியுள்ளது.

இந்த வன்முறை ஏதோ 2023 அக்டோபர் மாதம் துவங்கியதல்ல. 1967 ஆம் ஆண்டு பாலஸ் தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்த முதல் நாளில் இருந்தே பாலஸ்தீன ஊடகங்கள் மீது இஸ்ரேல் மிகக் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது. பாலஸ்தீனப் பத்திரிகைத் துறையைக் கட்டுப்படுத்துவதற்காகவே இஸ்ரேல், தணிக்கை செய்யும் சட்டங்களையும் அதற்கென ராணுவக் கட்டமைப்பையும் உருவாக்கி வைத்துள்ளது.

ஊடகங்களின் வளர்ச்சியும் தணிக்கை என்ற அடக்குமுறையும்

இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்குக் கரை, காசா, ஜெருசலேம் உள்ளிட்ட பகுதிகளில் “அரசி யல் கூட்டம்” மற்றும் “பிரச்சார பிரசுரம்” போன்ற வற்றை வெளியிடுவதை குற்றச் செயல் என முத்திரை குத்துவதற்காக 1967 இதே ஆகஸ்ட் மாதம் இஸ்ரேல் 101 என்ற ராணுவ உத்தரவை பிறப்பித்தது.

அனைத்து பாலஸ்தீன பத்திரிகைகளும் இஸ்ரேல் ராணுவத்தால் தணிக்கைக்கு உட் படுத்தப்பட்டன. ஒவ்வொரு இரவும், பத்திரிகை ஆசிரியர்கள் தாங்கள் அச்சிடத் திட்டமிடும் அனைத்துச் செய்திகளிலும் இரண்டு நகல்களை தணிக்கையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். இதில் கட்டுரைகள், புகைப்படங்கள் மட்டுமல்ல விளம்பரங்கள், வானிலை அறிக்கைகள், ஏன் குறுக்கெழுத்துப் புதிர்கள் கூட தணிக்கை செய் யப்பட்டன என்றால் பத்திரிகையை கண்டு இஸ்ரேல் எந்த அளவிற்கு பயந்திருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

பாலஸ்தீனர்களின் துன்பங்களை உலகின் கண் முன் கொண்டு செல்லும் முக்கிய ஆயுதமாக இருந்ததால் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் பத்திரிகைத் துறை தொடர்ந்து வளர்ந்தது. 1980 களின் முற்பகுதியில் ஆக்கிர மிக்கப்பட்ட பகுதிகளில் பாலஸ்தீனர்கள் மூன்று தினசரி செய்தித்தாள்கள், ஐந்து வார இதழ்கள் மற்றும் நான்கு பத்திரிகைகளை வெளியிட்டனர். மிகவும் பிரபலமான பத்திரிகைகள் சுமார் 15,000 பிரதிகள் வரை கூட விற்பனையாயின.

இஸ்ரேல் தணிக்கையாளர்கள் சொல்லும் அனைத்தையும் பாலஸ்தீன பத்திரிகை ஆசிரியர்கள் நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் பாலஸ்தீன அரசியல் குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப் பட்டு கைது செய்யப்படுவார்கள், நாடு கடத்தப்படு வார்கள். தற்போதும் இஸ்ரேல் ராணுவத்தால் படு கொலை செய்யப்படும் பாலஸ்தீன பத்திரிகையா ளர்கள் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய வர்கள் என இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறதே, அது இதனுடைய தொடர்ச்சி தான்.

1987-இல் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு எதிராக வெடித்தெழுந்த பாலஸ்தீனர்களின் முதல் எழுச்சி (இண்டிஃபாடா) தொடங்கிய போது, இஸ்ரேல் ராணுவம் 47 பாலஸ்தீன நிருபர்களைச் சிறையில் அடைத்தது. எட்டு உள்ளூர் மற்றும் பிராந்திய செய்தித்தாள்களைத் தற்காலிகமாகத் தடை செய்தது. இரண்டு பத்திரிகைகளின் உரிமங்கள் நிரந்தரமாகவே ரத்து செய்யப்பட்டன. நான்கு பத்திரிகை சேவை அலுவலகங்களை மூடியது என அரிசோனா பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா ஆய்வுப் பள்ளியில் இணைப் பேராசிரியராக உள்ள மஹா நாசர் தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

பத்திரிகையாளர்கள் படுகொலை

2000-க்குப் பிறகு மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மேலும் கொடூரமாக அதி கரித்தது. அதாவது சர்வசாதாரணமாக பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். 2002 இல் மேற்கு கரையிலுள்ள ஜெனின் பகுதியில் பாலஸ்தீன புகைப்படக் கலைஞரான இமாத் அபு சஹ்ரா (Imad Abu Zahra), 2003 இல் ரஃபாவில் பிரிட்டிஷ் திரைப்பட இயக்குநர் ஜேம்ஸ் மில்லர் (James Miller), 2008 இல் காசா வில் பணியாற்றிய ராய்ட்டர்ஸ் புகைப்பட பத்திரி கையாளர் ஃபாதெல் ஷனா (Fadel Shana) ஆகியோரை இஸ்ரேல் ராணுவம் சுட்டுக் கொன்றது.

2008 க்குப்பிறகு இஸ்ரேல் ராணுவத்துக்கும் பாலஸ்தீனக் குழுக்களுக்கும் இடையேயான சண்டைகள் மிகவும் தீவிரமடைந்த போது, பத்திரி கையாளர்கள் மேலும் ஆபத்தான சூழ்நிலைகளில் பணிபுரிய வேண்டிய கட்டாயம் உரு வானது. ஆயுதம் இல்லாத ஜனநாயகப் போ ராட்டங்களின் போதும் கூட பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்கவில்லை. 2018 இல் காசாவில் ‘கிரேட் மார்ச் ஆஃப் ரிட்டர்ன்’ என்ற வெகு மக்கள் பங்கேற்ற ஜனநாயகப் போராட்டம் நடந்தது.

அந்தப் போராட்டத்தின் போது பாலஸ்தீனப் பத்திரிகையாளர்களான யாசர் முர்தஜா (Yaser Murtaja), அஹ்மத் அபு ஹுசைன் (Ahmed Abu Hussein) ஆகிய இருவரும் (பிரஸ்) “PRESS” என்ற அடையாள உடையை அணிந்து இருந்த போதும் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப் பட்டனர். ஆறு மாதங்கள் நடந்த அந்தப் போ ராட்டத்தைப்பற்றி செய்திகள் சேகரித்த பணியில் இருந்த பத்திரிகையாளர்களில் சுமார் 115 பேர் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் படுகாய மடைந்தனர்.

இந்த கொடூரமான தாக்குதல், காசாவிலுள்ள பாலஸ்தீனர்களுடன் மட்டும் நிற்கவில்லை. 2022 மே மாதம் பாலஸ்தீன அமெரிக்கப் பத்திரிகையாளர் ஷிரீன் அபு அக்லே (Shireen Abu Akleh) ஜெனின் அகதிகள் முகாமில் கொல்லப்பட்டார். அவர் மிகவும் பிரபலமான பாலஸ்தீன நிருபர். அவரது இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்க ணக்கான மக்கள் பங்கேற்றனர். அங்கும் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

தாக்குதலை மறைக்க பொய்ப் பிரச்சாரம்

சர்வதேச மனிதாபிமான சட்டங்களானது, ஒவ்வொரு பத்திரிகையாளரும் பொதுமக்களுள் ஒருவரே. எனவே, போர் சமயங்களில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என சொல்கிறது. இதை இஸ்ரேல் ஒரு போதும் கடைப்பிடித்த தில்லை. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் இஸ்ரேல் அதி காரிகள், தாங்கள் பத்திரிகையாளர்களைத் திட்ட மிட்டு தாக்கவில்லை அல்லது அவர்கள் பத்திரிகையாளர்களே இல்லை, பயங்கரவாதிகள்/ அவர்களின் ஆதரவாளர்கள் என பொய்ப் பிரச்சாரம் செய் வார்கள். அதற்கு ஆதாரம் கேட்டாலும் கொடுக்க மாட்டார்கள்.

2018-இல் காசாவில் கொல்லப்பட்ட பத்திரிகை யாளர் முர்தஜாவை பயங்கரவாதி என்று தான் இஸ்ரேல் சொன்னது. ஆனால் அதற்கு ஆதாரம் தரவில்லை. அதேபோல 2022 ஆம் ஆண்டு அபு அக்லே படுகொலை செய்யப்பட்ட போது, முதலில் அவர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று இஸ்ரேல் சொன்னது. எனினும் உண்மையை நீண்ட நாள் மறைக்க முடியவில்லை. இருந்தபோதும் உண்மையை நேரடியாக ஒப்புக்கொள்ளாமல் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டதற்கு “அதிக வாய்ப்பு” இருக்கிறது. அதுவும் எதிர்பாராத ஒன்று. இதற்காக தனியாக அரசு வழக்குப்பதிவு செய்யாது எனச் சொல்லி விட்டது. கடைசியாக 2025 ஆகஸ்ட் 25 அன்று நாசர் மருத்துவமனையில் நடந்த தாக்குதலின் போதும் கூட நாங்கள் திட்டமிட்டு அவர்களை தாக்கவில்லை என்று தான் இஸ்ரேல் ராணுவச் செய்தித்தொடர்பாளர் எப்பி டேபிரின் தெரிவித்தார்.

தண்டனையில் இருந்து தப்பிக்கும் இஸ்ரேலியர்கள்

காசா மீது இஸ்ரேலின் தாக்குதல் துவங்கும் முன் 2023 மே மாதம் பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் இவ்வாறு கூறியது, “பத்திரிகையாளர்களுக்கு எதிராக இஸ்ரேல் ஆபத்தான வன்முறையைப் பயன்படுத்துகிறது, குற்றவாளிகளைத் தண்டிக்க தவறிவிட்டது” என்று அறிவித்திருந்தது.

ஆம். பல பத்தாண்டுகளாகவே பத்திரிகையா ளர்களின் மீதான தாக்குதல்கள் படுகொலைக ளுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள். ஏனென்றால் தண்டனையின்மையை இஸ்ரேல் அதிகாரப்பூர்வ நடைமுறையாக மாற்றி விட்டது.

பத்திரிகையாளர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தினரும் இஸ்ரேல் ராணுவத்தால் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள் என்பது இதில் இன்னொரு மிகக்கொடுமையான விஷயம். பாலஸ்தீன பத்திரிகையாளரின் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர், உடன் பிறந்தவர்கள், ஏன் சில நேரங்களில் ஒட்டுமொத்த குடும்பமும் இஸ்ரேல் ராணுவத்தின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் காசா பகுதிக்கான தலைமை செய்தியாளரான வால் அல்-தாஹ்தூ (Wael al-Dahdouh), மனைவி, இரண்டு குழந்தைகள், பேரன் ஆகியோர் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப் பட்டார்கள்.

ஒவ்வொரு நாளும் சர்வதேசச் சட்டங்களை மீறி பாலஸ்தீனர்கள் வாழும் பகுதிகளில் குண்டு வீசும் போதும் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் இஸ்ரேலின் இனப்படுகொலையை உலகின் கண்முன்னே காட்டுவதற்காக குண்டுகள் விழும் இடத்தை நோக்கி ஓடுகிறார்கள். தங்கள் குடும்பம் ஒட்டு மொத்தமாக அழிக்கப்பட்ட போதும், தங்களு டைய சகாக்கள் தங்கள் கண்முன்னே கொல்லப்படும் போதும் உலகிற்கு உண்மையைக் காட்ட வேண்டும் என்பதற்கான அவர்களது ஓட்டம் நிற்கவில்லை.

அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தில் உள்ள ஒரு மனிதத்தின் நெஞ்சுக்கூட்டினுள் பல ஆண்டுகளாக எரிந்து வரும் விடுதலைக் கனல் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவது போல அவர்களின் புகைப்படக்கருவிகள் ஒருவர் கையில் இருந்து மற்றொருவர் கைக்கு மாறுகிறது.

இஸ்ரேல் காசா மீது நடத்தும் இனப்படு கொலை தாக்குதல்களுக்கு பாலஸ்தீனப் பத்திரி கையாளர்களே முதன்மையான சாட்சிகளாக உள்ளனர். அதனாலேயே அவர்கள் அதிகமாகக் கொலை செய்யப்படுகிறார்கள். இந்தக் கொடுமை முடிவுக்கு வர வேண்டுமானால் இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு சர்வதேச அளவில் அனைத்து நாட்டுத் தொழிலாளர்கள், மக்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்கள் போர் நிறுத்தத்திற்கு தங்கள் அரசாங்கங்கள், அமெ ரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் ஐ.நா உள்ளிட்ட சர்வ தேச அமைப்புகளுக்கும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி பெரும் போராட்டங்களை நடத்திட வேண்டும்.

அதே நேரத்தில் பாலஸ்தீனத்தில் நடக்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும் பாலஸ்தீன பத்திரிகையாளர்களின் செய்திகளை இந்தியாவில் ஒவ்வொரு ஊடகமும் ஊடகவிய லாளரும் தங்கள் ஊடகங்களில் மறுபகிர்வு செய்யவும் அங்கு நடக்கும் உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டவும் தீவிரமாகப் பணி செய்ய வேண்டும்.

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *