Tamil Marx

ஆசியா சர்வதேசம்

தென் கொரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது ஏன்?

தென் கொரியாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது ஏன்?
  • PublishedDecember 5, 2024

செவ்வாயன்று ( டிச-3) இரவு தென்கொரிய அரசு தொலைக்காட்சியில் தோன்றிய ஜனாதிபதி யூன் சுக் யோல், நாடு முழுவதும் அவசர நிலையை அறி வித்தார். உடனடியாக ஜெனரல் பார்க் அன்-சூவை ராணுவ சட்டத் தளபதியாக நியமித்தார்.  நாடாளுமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. அனைத்து ஊட கங்களும் அரசின் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டன.

யூன் சுக் இந்த அவசர நிலை யை அறிவித்ததற்கு காரணம் கூறும்போது, எதிர்க்கட்சியான ‘ஜனநாயகக் கட்சி’ வடகொரியாவுக்கு ஆதரவு காட்டுவதாகவும், நாடாளு மன்றத்தை செயலிழக்கச் செய்வதாகவும் குற்றம் சாட்டினார். நாடாளுமன்றம் குற்றவாளிகளின் சொர்க்கமாக மாறிவிட்டதாகக் கூறினார். தென்கொரியாவை வடகொரியா மற்றும் கம்யூனிஸ்ட்களிடமிருந்து காப்பாற்றவே இந்த அவசரநிலை என்றார்.

ஆனால் வடகொரியாவால் என்ன ஆபத்து உள்ளது என்பதற்கோ, எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை எப்படி முடக்குகின்றன என்ப தற்கோ எந்த ஆதாரமும் தரவில்லை.

இதனைத் தொடர்ந்து நாட்டின் தலைநகர், நாடாளுமன்றம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் ராணுவம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த மக்களும், எதிர்க்கட்சியினரும் நாடாளுமன்றத்தை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாடாளுமன்றத்தில் 190 எம்பிக்கள் இந்த அவசரகால சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர். இதனால் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அவசரநிலை முடிவுக்கு வந்தது. ஆனால் ராணுவம் ஜனாதிபதியின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பதால், அவரது உத்தரவு இல்லாமல் ராணுவம் திரும்பாது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இந்த அவசரநிலை அறிவிப்புக்கு யூன் சுக்கின் சொந்த கட்சியான மக்கள் சக்தி கட்சியே (PPP) கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அரசியலமைப்புக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று கூறி கண்டித்தது. தனக்கு எதிர்ப்புகள் அதிகரித்ததால், அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமலேயே கொண்டுவந்த அவசரநிலை சட்டத்தை யூன் சுக் திரும்பப் பெற்றார்.

அரசியல் கொதிநிலைக்கான பின்னணி

ஜனாதிபதி யூன் சுக்கின் மனைவி கிம் கியோன் ஹீ, கொரிய-அமெரிக்க மத போதகர் சோய் ஜே-யங்கிடமிருந்து ₹1.86 லட்சம் மதிப்புள்ள கைப்பையை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது  ‘டியோர் பேக் ஊழல்’ என்று அழைக்கப்படுகிறது.

“சியோலின் குரல்” என்ற இடதுசாரி யூடியூப் பக்கம் இது குறித்த ஆதாரத்துடன் காணொலி வெளியிட்டது. தென் கொரிய ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி, அரசு அதிகாரிகளும் அவர்களது துணைவர்களும் ₹63,000-க்கு மேல் மதிப்புள்ள பரிசுகளை பெற முடியாது.

மேலும் ஜனாதிபதியின் மனைவி வடகொரியா குறித்த  அரசின் முடிவுகளில் தலையிடுகிறார் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இந்த சர்ச்சைகள் யூன் சுக்கின் மக்கள் சக்தி கட்சித் தலைவர் ஹான் டோங்-ஹூன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. ஜனாதிபதி மனைவி மீது விசாரணை நடத்த வேண்டும் என ஹான் வலியுறுத்தி வந்தார்.

வடகொரியாவுடனான உறவு

யூன் சுக் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவுடன் நெருங்கிய ராணுவ உறவை வளர்த்து வருகிறார். வடகொரியாவுடன் மோதல் போக்கை கடைப் பிடித்து, ராணுவ நடவடிக்கைக்கும் தயாராக உள்ளார். இது உள்நாட்டு அமைதியைக் கெடுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. வட கொரியா தனது ராணுவ வீரர்களை ரஷ்யாவிற்கு ஆதரவாக உக்ரைனுக்கு எதிராக போரிட அனுப்பியதாக எந்த தெளிவான ஆதாரமும் இல்லாமல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதற்றத்தை அதிகரித்து வருகிறார்.

மக்கள் ஆதரவற்ற நிலை

நாடாளுமன்றத்தில் யூன் சுக்கின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை. எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கே அதிக உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அவரால் பெரும்பாலான கொள்கைகளை சட்டமாக்க முடியவில்லை. மக்கள் மத்தியிலும் அவருக்கு எதிரான அதிருப்தி அதிகரித்துள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

தற்போது ஜனாதிபதி யூன் சுக் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடமிருந்து எழுந்துள்ளது. நாட்டின் அரசியல் கொதிநிலை மேலும் உச்சம் அடைந்துள்ளது

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *