Tamil Marx

கட்டுரைகள் சர்வதேசம்

கியூபாவை முடக்கும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் இடதுசாரி அமைப்புகள்

கியூபாவை முடக்கும் அமெரிக்கா உதவிக்கரம் நீட்டும் இடதுசாரி அமைப்புகள்
  • PublishedOctober 27, 2024

கியூபா மீதான பொருளாதாரத் தடை கள் மூலம் அந்நாட்டை முடக்கும் வேலைகளை அமெரிக்கா தீவிரமாக செய்து வரும் நிலையில் மக்கள் மன்றம் ( peoples forum), சோசலிசம் மற்றும் விடுதலைக்கான கட்சி உள்ளிட்ட அமெரிக்காவை தளமாகக் கொண்ட இடதுசாரி அமைப்புகள் கியூபாவிற்கு உணவு மற்றும் ஜெனரேட்டர்கள் என அவசரகால அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கான நன்கொடை பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. மேலும் இந்த அமைப்பாளர்கள் ஒரு கடிதத்தையும் வெளியிட்டுள்ளனர். அதில் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடுகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள கியூபாவை நீக்க வேண்டும் எனவும், அந்நாட்டின் மீதான அமெரிக்காவின் கொடூரமான தடைகளை நீக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை வலியுறுத்தியுள்ளனர்.

மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கியூபா :

அக்டோபர் மாதம் இரண்டாம் வாரத்தில் வீசிய மோசமான புயலால் கியூபாவில் உள்ள மின்சாரப் பகிர்வு கட்டமைப்புகள் அனைத்தும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின. அன்டோனியோ கிடேராஸ் தெர்மோ எலக்ட்ரிக் பவர் பிளாண்ட் உள்ளிட்ட அந்நாட்டின் மிக முக்கியமான மின் உற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட ஒட்டுமொத்த மின் கட்டுமானத்தையும் உடனடியாக கியூபா அரசாங்கத்தால் சரி செய்ய முடியவில்லை.

இதனால் சுமார் 72 மணிநேரம் ( 3 நாட்கள் ) மின்சாரம் இல்லாமல் கியூபா முழுவதும் மக்களின் அன்றாட வாழ்க்கை, அரசு அலுவலகங்களின் அன்றாடச் செயல்பாடுகள் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகின. கியூபா ஜனாதிபதி மிகுவெல் டயஸ்-கேனல் பேசிய போது, மக்களின் துயரை நீக்கவேண்டி முழு மின்சார கட்டமைப்பையும் சரிசெய்யும் வரை நாம் யாரும் ஓய்வெடுக்கப்போவதில்லை என மக்களுக்கு உறுதி கொடுத்தார். நாட்டின் மின்சாரத் துறை இயக்குனர் பொறியாளர் லாசரோ குர்ரா ஹெர்னாண்டஸ் செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது, நாட்டின் பல மின் உற்பத்தி நிலையங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

அவற்றை சரிசெய்து மீண்டும் மின்சாரம் வழங்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதாகக் கூறினார். அதன் அடிப்படையில் மக்களின் உதவி மற்றும் ஒற்றுமையுடன் கியூபா கம்யூனிஸ்ட் அரசாங்கமும் மின்துறை ஊழியர்களும் மின் கட்டமைப்பை மிகவும் பாடுபட்டு சரி செய்து வருகின்றனர்.

அமெரிக்காவின் தடையால் தவிக்கும் கியூபா :

கடந்த 60 ஆண்டுகாலமாக கியூபா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. 2019 ஆம் ஆண்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு கியூபாவை பயங்கரவாத நாடுகளின் பட்டியலில் இணைத்தது. இதன் பிறகு ஜனாதிபதி தேர்தலில் வென்ற ஜோ பைடன் கியூபாவை பயங்கரவாத நாடுகளை ஆதரிக்கும் பட்டியலில் இருந்து நீக்காமல் மேலும் டிரம்ப் ஆட்சியின் போது விதிக்கப்பட்ட 243 தடைகளையும் அவர் தொடரச் செய்து கியூபாவை அதிகமாக முடக்கினார். இந்த தடைகளின் மூலமாக பிற நாடுக ளுடன் கியூபாவினால் போதிய வர்த்தக உறவுகளை மேற்கொள்ள இயலாத நிலை உருவாக்கப்பட்டது. இதன் காரணமாக கியூபாவின் தொழில்துறைகளை வளர்ப்பதற்கு தேவையான எரிபொருள், புதிய தொழில் நுட்பங்கள், கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான உதிரி பாகங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு இயலாத நிலைமை தீவிரமாகி உள்ளது.

அமெரிக்காவின் தடையால் முடக்கப்பட்ட நிலை :

புயலின் காரணமாக முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்ய போதிய நவீன தொழில் நுட்பப் பொருட்கள், உதிரி பாகங்கள் இல்லாமல் கியூப மின்துறை பற்றாக்குறையில் தவித்து வருகிறது. அமெரிக்கா கியூபா மீது விதித்த தடையின் காரணமாகவே இந்த பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உலகளவில் மின் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சிக்கு ஏற்ப போதுமான முக்கியமான உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் மின்துறையை மீட்டுருவாக்கம் செய்வதில் கடும் சிரமங்களை கியூபா எதிர் கொண்டுள்ளது.

இது அந்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையிலும், பொதுத்துறைகளிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தடைகள் மூலம் கியூப அரசை முடக்குவது, அதன் மூலம் மக்கள் வாழ்க்கையில் நேரடி பதிப்புகளை ஏற்படுத்தி அவர்களை அதிக துன்பத்திற்கும் கோபத்திற்கும் உள்ளாக்குவது, அதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக மக்களை திசை திருப்பி ஆட்சிக்கவிழ்ப்பை ஏற்படுத்துவது என்ற திட்டத்துடன் அமெரிக்கா நீண்டகாலமாகவே செயல்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் வெறி

கடந்த ஆண்டு ஐ.நா அவையில் கியூபா மீதான தடைகளை நீக்க கோரிய தீர்மானத்தின் மீது நடந்த வாக்கெடுப்பில் சுமார் 187 நாடுகள் கியூபாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. ஆனால் அமெரிக்காவும் இஸ்ரேலும் மட்டுமே எதிராக வாக்களித்தன. உக்ரைன் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. கியூபாவிற்கு ஏற்பட்ட செலவு கியூப வெளியுறவுத் துறை அமைச்சகம் அதனுடைய ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, புயலின் காரணமாக முடங்கியுள்ள மின் கட்டமைப்பை சரி செய்வதற்காக வெறும் 25 நாட்களில் அந்நாடு செய்த செலவானது, கியூபா முழுவதும் 1 ஆண்டுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளுக்கு செய்யப்படும் செலவுக்கு நிகரானது என தெரிய வந்துள்ளது. அதாவது இந்த ஒரு மாதத்தில் 42.1 கோடி அமெரிக்க டாலர்கள் ( 332 கோடியே 88 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய் ) செலவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அப்படி என்றால் ஒரு நாளைக்கு 1.38 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் 10 கோடியே 90 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் )செலவாகியுள்ளது.

இத்தகைய நெருக்கடியான சூழலில் தான் அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கி வரும் சில இடதுசாரிக்குழுக்கள் உலகம் முழுவதும் இருந்து பல இடதுசாரி அமைப்புகள், ஆதரவாளர்கள், கியூப ஆதரவாளர்களிடம் இருந்து நன்கொடை பெற்று கியூபாவிற்கு அனுப்ப நன்கொடை பிரச்சாரத்தை துவங்கியுள்ளன. கியூபாவை பொருளாதார ரீதியாக முடக்கி மக்களை இடதுசாரி அரசுக்கு எதிராக திருப்பி ஆட்சிக்கவிழ்ப்பை நடத்திவிடலாம் எனும் அமெரிக்கா என்ற பிணந்தின்னி கழுகுக்கு, கியூப மக்களும் இடதுசாரி அரசும் பொதுவுடைமைக் கல்வி தெளிவுடன் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகின்றனர்.

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *