Tamil Marx

இந்தியா

Cockroach Janta Party (CJP)-யைக் கண்டு ஏன் அஞ்சுகிறது BJP?-எரன்

Cockroach Janta Party (CJP)-யைக் கண்டு ஏன் அஞ்சுகிறது BJP?-எரன்
  • PublishedMay 29, 2026

நீதித்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் சர்மா, வேலையில்லா இளைஞர்களை “ஒட்டுண்ணிகள்”, “கரப்பான்பூச்சிகள்” என்று குறிப்பிட்டிருப்பதை வெறும் தனிப்பட்ட கருத்தாக மட்டும் பார்க்க முடியாது. அது இந்த நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சமூக–பொருளாதார நெருக்கடியை மறைக்கும் ஆபத்தான அதிகார மனநிலையின் வெளிப்பாடாகும்.

இந்தியாவில் வேலையின்மை என்பது தனிநபர்களின் “சோம்பேறித்தனம்” அல்லது “திறமையின்மை” காரணமாக உருவான பிரச்சனை அல்ல. அது முழுமையான அமைப்புசார் (systemic) பிரச்சனை.

சமீப ஆண்டுகளின் புள்ளிவிபரங்களே இதை தெளிவாக காட்டுகின்றன.

2024–25 காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த இளைஞர் வேலையின்மை விகிதம் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் உள்ளது. குறிப்பாக 15–29 வயதுக்குட்பட்ட கல்வியறிவு பெற்ற இளைஞர்களிடையே வேலையின்மை மிக அதிகமாக உள்ளது. பல ஆய்வுகளின்படி, பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களில் வேலை இல்லாதோரின் விகிதம், பள்ளிப்படிப்பே முடிக்காதவர்களை விட அதிகமாக இருக்கிறது. அதாவது, கல்வி பெற்றாலே வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையே சிதைந்து வருகிறது.

ஒரு அரசு வேலை அறிவிப்பு வந்தாலே அதன் பின்னால் கோடிக்கணக்கான விண்ணப்பங்கள் குவிகின்றன. சில ஆயிரம் பணியிடங்களுக்கு பல லட்சம் அல்லது கோடி அளவிலான விண்ணப்பங்கள் வருவது, இந்த நாட்டின் வேலைவாய்ப்பு நெருக்கடியின் நேரடி சான்று.

இந்திய ரயில்வே, வங்கி, SSC, UPSC, மாநில அரசு தேர்வுகள், ஆசிரியர் பணியிடங்கள் — எந்தத் துறையைக் கண்டாலும் அதே நிலை. தேர்வுகள் அறிவிக்கப்படுகின்றன; தாமதப்படுத்தப்படுகின்றன; சில நேரங்களில் ரத்து செய்யப்படுகின்றன; வழக்குகளில் சிக்குகின்றன; ஆனால் இளைஞர்களின் வாழ்க்கை மட்டும் காத்திருக்க முடியாமல் சிதைந்து கொண்டே செல்கிறது.

இன்று நாட்டில் அரசு துறைகளில் லட்சக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன.

  • பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை
  • அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறை
  • நீதித்துறையில் நீதிபதி காலியிடங்கள்
  • ரயில்வே மற்றும் பொதுத்துறைகளில் நிரப்பப்படாத பணியிடங்கள்
  • அரசு அலுவலகங்களில் குறைந்த பணியாளர்களால் அதிக வேலைப்பளு

இவை அனைத்தும் ஒரே உண்மையை காட்டுகின்றன:

வேலை செய்வதற்கு தொழிலாளர்கள் வேண்டும் என்ற தேவை இருக்கிறது. வேலை செய்யவும் தயாரான மக்கள் இருக்கிறார்கள். ஆனால் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் நிரப்பவும் அரசாங்கமும் அவர்களின் அரசியல்–பொருளாதார அமைப்புகளும் தோல்வியடைந்துள்ளன அல்லது வேலைவாய்ப்புகளை உருவாக்க மறுத்து வருகின்றன.

மற்றொரு பக்கம், தனியார் துறையில் வேலை கிடைக்கும் இளைஞர்களின் நிலையும் பாதுகாப்பாக இல்லை.

IT நிறுவனங்களில் “dream job” என்று நம்பி சேரும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், சில ஆண்டுகளுக்குள் அதிகமான வேலைப்பளு, மனஅழுத்தம், இரவு பகல் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. நேரம், “performance” என்ற பெயரில் நடக்கும் சுரண்டல் ஆகியவற்றில் சிக்கிக் கொள்கிறார்கள்.

சமீப ஆண்டுகளில் பெரும் IT நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான பணியாளர்களை திடீரென வேலைநீக்கம் செய்துள்ளன. AI, automation, cost-cutting, restructuring போன்ற வார்த்தைகளின் பின்னால், மனிதர்களின் வாழ்க்கைகளே தூக்கி எறியப்படுகின்றன.

ஒரு நாள் “You are our family” என்று பேசும் நிறுவனம், அடுத்த நாள் ஒரு email மூலம் பணிநீக்கம் செய்கிறது.

  • Campus interview-களிலும் மோசடிகள் அதிகரித்து வருகின்றன.
  • offer letter கொடுத்து joining date-ஐ தள்ளிப்போடுவது
  • இறுதியில் offer revoke செய்வது
  • internship என்ற பெயரில் இலவச உழைப்பை சுரண்டுவது
  • freshers-ஐ மிகக் குறைந்த சம்பளத்தில் கட்டுப்படுத்துவது
  • bond மற்றும் contract மூலம் அடிமைத்தனமான வேலை சூழல் உருவாக்குவது

இவை அனைத்தும் இன்று இளைஞர்கள் எதிர்கொள்ளும் மறைக்கப்பட்ட நிஜங்கள்.

ஒரு பக்கம்:

  • தனியார்மயமாக்கல் அதிகரிக்கிறது
  • நிரந்தர வேலைகள் குறைக்கப்படுகின்றன
  • ஒப்பந்த வேலைகள் (contract jobs) அதிகரிக்கின்றன
  • தொழிற்சாலைகள் மனித உழைப்பை குறைக்கின்றன
  • AI மற்றும் automation மூலம் பணிநீக்கங்கள் அதிகரிக்கின்றன
  • அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் கிடக்கின்றன

மற்றொரு பக்கம்:

  • கல்விக் கட்டணம் உயர்கிறது
  • கல்விக்கடன் சுமை அதிகரிக்கிறது
  • விலைவாசி உயர்கிறது
  • வீட்டு வாடகை முதல் மருத்துவச் செலவு வரை அனைத்தும் சாதாரண மக்களின் வாழ்வை நசுக்குகின்றன

இந்த முரண்பாட்டின் மத்தியில் சிக்கிக் கொள்பவர்கள் இளைஞர்கள் தான்.

இன்று ஒரு நடுத்தர அல்லது ஏழை குடும்பத்தில் பிறக்கும் இளைஞன், கல்விக்காக கடன் வாங்குகிறான், வேலைக்காக நகரங்களுக்கு அலைகிறான், அரசுத் தேர்வுகளுக்காக ஆண்டுகள் செலவழிக்கிறான், இறுதியில் மாதம் ₹10,000–₹15,000 சம்பளத்திற்குக் கூட போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறான்.

இந்த நிலையை உருவாக்கியது யார்?

வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் “GDP வளர்ச்சி” என்ற எண்களை மட்டும் கொண்டாடும் பொருளாதாரக் கொள்கைகளா?

கல்வியை உரிமையிலிருந்து வணிகமாக மாற்றிய அரசியலா?

மக்களின் வரிப்பணத்தில் இயங்கிக் கொண்டே, மக்களின் துயரத்தை புரிந்துகொள்ள மறுக்கும் அதிகார வர்க்க மனநிலையா?

உண்மையில் “ஒட்டுண்ணி” யார்?

தன் உழைப்பை விற்றும் வாழ முடியாமல் தவிக்கும் இளைஞனா?

அல்லது, மக்களின் உழைப்பில் உருவாகும் செல்வத்தை தனிப்பட்ட லாபமாக குவித்து வைத்து, அதே மக்களையே அவமதிக்கும் அதிகார–முதலாளித்துவ கூட்டணியா?

இந்த நாட்டின் இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள்; பிச்சை கேட்கவில்லை. அவர்கள் மரியாதையுடன் வாழ்வதற்கான உரிமையை கேட்கிறார்கள்.

ஒரு சமூகத்தில் கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றி தவிக்கிறார்கள் என்றால், அது அந்த இளைஞர்களின் அவமானம் அல்ல — அந்த சமூக, அரசியல், பொருளாதார அமைப்பின் அவலட்சணம், கேவலம், மற்றும் தோல்வி.

இன்று அவமதிக்கப்படும் அந்த இளைஞர்களே நாளைய தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், படைப்பாளிகள் — இந்த நாட்டின் உண்மையான உற்பத்திச் சக்தி.

அவர்களை “கரப்பான்பூச்சிகள்” என்று பார்க்கும் மனநிலை தான் மனிதநேயமற்றது. ஏனெனில் இந்த நாட்டை சுமந்து நிற்பது அதிகார மாளிகைகள் அல்ல. அன்றாடம் உழைக்கும் பெரும்பான்மை மக்கள்தான். அந்தப் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் விழித்துக் கிளர்ந்தெழுந்து, ஒன்று திரண்டு, தங்களுக்கான சமூக மாற்றத்தை நிகழ்த்தியே தீருவார்கள். ஏனெனில், பசியும் அவமானமும் நிரந்தரமாக அடக்கப்பட முடியாது.

இளைஞர்களின் கோபம் தனிப்பட்ட தோல்வியின் கோபமல்ல அது ஒரு அநீதியான அமைப்புக்கு (System) எதிரான சமூக ரௌத்திரம்.

அந்த ரௌத்திரம் நாளை மாற்றமாக வெடிக்கும்.

கட்டுரையாளர்

– எரன் ☭

 

Written By
tamilmarxorg

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *