Tamil Marx

இந்தியா கட்டுரைகள்

“மல நீரும்” “மலை நீரும்”- சேது சிவன்

“மல நீரும்” “மலை நீரும்”- சேது சிவன்
  • PublishedMarch 17, 2026

“மல நீரும்” “மலை நீரும்” மோடியின் புதிய இந்தியாவில் குடிநீர் அரசியல்

இன்ஸ்டாகிராம் அல்லது முகநூலில் நாம் சில வீடியோக்களைப் பார்த்திருப்போம். மது, சிகரெட் வகைகளைச் சுவைத்து அதன் பிராண்டைச் சரியாகச் சொல்பவார்கள்.  2026 ஜனவரியில் இந்தியாவில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் மதுவோ, சிகரெட்டோ இல்லை; மாறாகப் பல்வேறு நாடுகளின் மலை நீரூற்றுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட விலையுயர்ந்த குடிநீர் இருந்தது.

32 வயதான அவந்தி மேத்தா எனும் ‘வாட்டர் சோமலியர்’ நடத்திய இந்த நிகழ்வில், பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத் தண்ணீரான ‘எவியன்’, இத்தாலியின் ‘சான் பெல்லெக்ரினோ’ மற்றும் இந்தியாவின் ‘ஆவா’ போன்ற பிராண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. பங்கேற்பாளர்கள் அந்த நீரைச் சுவைத்து, அதில் உள்ள தாதுக்கள் (Minerality), கார்பனேற்றம் (Carbonation) மற்றும் உவர்ப்புத்தன்மையைக் (Salinity) கொண்டு அது எந்த நாட்டு நீர் என்று கண்டு பிடிக்க வேண்டும்.

பணக்காரர்களுக்கான ‘புட்டிக்’ சந்தை

இந்தியாவில் பிரீமியம் ரகக் குடிநீர் வணிகம் தற்போது சுமார் ₹3,350 கோடி மதிப்புடையதாக உள்ளது. சாதாரண ஒரு லிட்டர் குடிநீர் 20 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், இந்த ‘மலை நீர்’ பாட்டில்கள் 84 ரூபாயில் தொடங்கி பல நூறு ரூபாய்க்கு விற்கப்படுகின்றன. சில இறக்குமதி பிராண்டுகள் 800 ரூபாய் வரை கூட விற்பனையாகின்றன. உதாரணமாக, 250 மில்லி ‘ஆவா’ குடிநீரின் விலை 125 ரூபாய். இதைத்தான் இந்தியத் தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா 850 ரூபாய் மதிப்புள்ள பாட்டில் நீரைக் குடித்த செய்திகள் நாம் அறிந்ததே. 2021-ல் வெறும் 1 சதவீதமாக இருந்த இந்தப் பிரீமியம் குடிநீர் சந்தை, 2025-ல் 8 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு 24 சதவீத வேகத்தில் வளரும் இந்தச் சந்தை, முற்றிலும் பணம் படைத்தவர்களுக்கான ஒரு ‘புட்டிக்’ சந்தையாகவே உள்ளது. அரசு வழங்கும் குடிநீரின் மீதான அவநம்பிக்கையே இந்த கார்ப்பரேட் வணிகத்தின் வளர்ச்சிக்குத் தூண்டுகோலாக உள்ளது.

விளிம்புநிலை மக்களின் அவலம்

மறுபுறம், மோடி தலைமையிலான ‘புதிய இந்தியாவில்’ பஞ்சம், பட்டினி மற்றும் சுகாதாரமற்ற சூழலில் மக்கள் செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்தித்து வருகின்றன. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 22 மாநிலங்களில் உள்ள 26 நகரங்களில் சுமார் 5,500 மக்கள், மலம் மற்றும் சாக்கடைக் கழிவுகள் கலந்த அசுத்தமான குடிநீரால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

2025 டிசம்பரில் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில் கழிப்பறைக்கு அருகே இருந்த குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்ததால் 17 பேர் உயிரிழந்த கொடூரம் நிகழ்ந்தது. குஜராத்தின் காந்தி நகரில் 150-க்கும் மேற்பட்ட குழந்தைகள் டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். பீகாரின் கன்கர்பாக் பகுதியில் குடிநீர் குளிப்பதற்குக் கூட லாயக்கற்ற நிலையில் அசுத்தமாகியுள்ளது. முகம் கழுவினால் உடலில் அரிப்பு ஏற்படுவதாக மக்கள் கண்ணீர் மல்கப் புகார் தெரிவிக்கின்றனர்.

அலட்சியத்தின் உச்சம்

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் குடிநீர் குழாய்களில் கழிவுநீர் கசிவது ஒரு தீராத சுகாதார நெருக்கடியாகவே உள்ளது. இதற்கு முக்கியக் காரணம், பல ஆண்டுகளாக மாற்றப்படாமல் இருக்கும் துருப்பிடித்த 40 ஆண்டுகாலப் பழைய குழாய்கள் ஆகும். இவை சாக்கடைக் கால்வாய்களுக்கு மிக அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியிலேயே 18 சதவீத குழாய்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலானவை.

மத்திய அரசு AMRUT 2.0 போன்ற திட்டங்களைக் கொண்டு வந்தாலும், பாதிப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுக்கும் ‘ரியாக்டிவ்’ (Reactive) முறையையே இன்னும் தொடர்கிறது. ஐக்கிய நாடுகள் அவையின்படி, பாதுகாப்பான குடிநீர் என்பது அடிப்படை மனித உரிமை. ஆனால், இந்தியாவில் ஆய்வு செய்யப்பட்ட 485 நகரங்களில் 10 சதவீதத்திற்கும் குறைவான நகரங்களே தூய்மையான நீரை வழங்குவதாகத் தெரிவித்துள்ளன.

கோர முகம்

பாஜக ஆட்சியில் கார்ப்பரேட்டுகளும், கார்ப்பரேட் பணத்தால் பாஜகவும் மட்டுமே செழித்து வளர்கின்றன. இந்திய நகர்ப்புறக் குடிநீர் கட்டமைப்பின் பலவீனத்தை இந்தச் சம்பவங்கள் அப்பட்டமாகக் காட்டுகின்றன. இன்றைய புதிய இந்தியா, பணம் படைத்தவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் கனிமத் தாதுக்கள் நிறைந்த ‘மலை நீரையும்’, அன்றாடம் உழைத்து வாழும் ஏழை மக்களுக்குச் சாக்கடைக் கழிவுகள் கலந்த ‘மல நீரையும்’ பருகக் கொடுத்துள்ளது. இதுதான் மோடி கட்டமைக்கும் புதிய இந்தியாவின் கோர முகம்.

-சேது சிவன்

இக்கட்டுரை முதலில் 15 மார்ச் 2026 அன்று தீக்கதிரில் வெளியானது

Written By
shethu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *