இந்தியாவில் வரதட்சணைக் கொடுமைகளால் ஒவ்வொரு நாளும் 16 பெண்கள் கொலை செய்யப்படுகிறார்கள்
உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நிக்கி பாதி என்ற 28 வயதுப் பெண், அவரது குடும்பம் 36 லட்சம் ரூபாய் வரதட்சணை தராததால் கணவர் வீட்டினரால் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் (NCRB) சமீபத்திய தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் வர தட்சணைக் கொடுமை தொடர்பான மரணங்கள் சுமார் 14% அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் சுமார் 16 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொலையாகின்றனர். பலமற்ற சட்டங்கள் உ.பி மாநிலத்தில் நடந்துள்ள நிக்கியின் மரணம் தொடர்பான வழக்கில் கேஸ் சிலிண்டர் வெடித்து பலியானதாகக் கூறப்படும் முரண்பட்ட தகவல்களால் அப்பெண்ணுக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. நீதிமன்ற நடைமுறைகள் மிகநீளமான செயல்முறையாக இருப்பதால் இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிக அரிதான நிகழ்வாகவே உள்ளது. மேலும் வன்முறைக்கு ஆளாகும் பல பெண்கள், கணவர் மற்றும் அவரது குடும்பத்தையே பொருளாதார ரீதியாக சார்ந்திருப்பதால், கொடுமைகளுக்கு எதிராக புகார் அளிப்பதில் தயக்கம் காட்டுகின்றனர்.
பலமான சட்டம் இல்லை
திருமணமான பிறகு, மனைவியின் சம்மதமின்றி பாலியல் உறவுகொள்வது (Marital Rape) இன்னும் இந்தியாவில் சட்டப்பட்டி குற்றமாகச் கருதுவதற்கான சட்டம் இயற்றப்படவில்லை. பாரதிய நியாய சம்ஹிதா, 2023 (BNS, 2023) சட்டத்தின் கீழ், மனைவி 18 வயதுக்குட்பட்ட நபராக இல்லாதபோது கணவன் மனைவியுடன் உடலுறவு கொள்வது வன்புணர்வு அல்ல என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மனரீதியான வன்முறை அவமானப்படுத்துதல், மிரட்டுதல் அல்லது தனிமைப்படுத்துதல் போன்ற உணர்ச்சிப் பூர்வமான வன்முறைகள் சாதாரணமாகக் கருதப்படுகின்றன. சமூக மனநிலை தேசிய குடும்ப சுகாதார ஆய்வு (2019-21, NFHS-5,) தகவலின்படி, திருமணமான பெண்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் கணவரால் வன்முறையை அனுபவிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
அதிர்ச்சியளிக்கும் வகையில், திருமணமான பெண்களில் 47% பேரும், ஆண்களில் 43% பேரும், மனைவி வாதிட்டால், அனுமதி இல்லாமல் வெளியே சென்றால் அல்லது வீட்டு வேலைகளை கவனிக்காவிட்டால் கணவர் அவர்களை அடிப்பது நியாயமானது என்று நம்புகிறார்கள். இந்த மனப்பான்மையே கொடுமைகளைச் சகித்துக்கொள்வது இயல்பு என்ற நிலைக்குத் தள்ளுகிறது.
வீடுகளுக்கு வெளியே பொது மற்றும் டிஜிட்டல் தளங்களும் பெண்களுக்குப் பாதுகாப்பற்றதாக மாறி வருகின்றன. தில்லி, மும்பை, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களில், பத்தில் நான்கு பெண்கள் பயணம் செய்யும் போதோ அல்லது பணிபுரியும்போதோ பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள். இணையத்தில், பெண்கள் சைபர்ஸ்டால்கிங், போலிக் காணொலிகள் (Deepfakes), தகவல் திருட்டு (Doxxing) மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற புதிய வகையிலான துன்புறுத்தல்களை எதிர்கொள்கின்ற னர்.
குறிப்பாக செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு பிறகு சமீபத்தில் இந்தியப் பெண்களின் முகம் மற்றும் புகைப்படங்களை கொண்டு உருவாக்கப்பட்ட “நிர்வாணப் படங்கள்” சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இது போன்ற குற்ற நடவடிக்கைகளானது பொதுமக்களை பாதுகாக்கும் தொழில்நுட்பச் சட்டங்கள் அறிமுகம் செய்யப்படுவதை விட வேகமாக வளர்ந்து வருகின்றது.
தீர்வை நோக்கிய கூட்டு முயற்சி
இந்தச் சிக்கலைச் சட்டம் ஒழுங்கு சார்ந்த பிரச்சனையாக மட்டும் கருதுவது போதுமானதல்ல. வன்முறையை ஒரு சமூக நோயாகவும் அதனை ஒரு பொது சுகாதார அவசரநிலையாகவும் அங்கீகரிக்க வேண்டும் என இந்திய மக்கள்தொகை அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநராக உள்ளபூனம் முத்ரேஜா வலியுறுத்தியுள்ளார்.
மேலும் ஆஷா (ASHA) மற்றும் ஏஎன்எம் (ANM) போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்குப் பாலின அடிப்படையிலான வன்முறையைக் கண்டறியவும், அதற்கு உரிய முறையில் பதிலளிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட மற்றும் சமூக ஆதரவை வழங்கவும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல பெண்கள் மீதான வன்முறையை குறைக்கவும் கட்டுப்படுத்தவும் முன்னெடுக்கப்படும் போராட்டத்தை பெண்கள் மட்டுமே நடத்த முடியாது.
ஆண்களும், சிறுவர்களும் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஆதிக்க மனநிலையில் இருந்து வெளியேறி கவனிப்பு மற்றும் மரியாதையை மதிக்கும் வகையில் ஆண்களின் சிந்தனைகளையும் இலட்சியங்களையும் மாற்றுவது அவசியம். ஆண்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வது, வரதட்சணையைக் கேட்க மறுப்பது மற்றும் தங்களைச் சுற்றி நடக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறையை எதிர்ப்பது ஆகியவையும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.