திமுக அரசின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தும் சாம்சங் தொழிலாளர் போராட்டம்
சாம்சங் முதலாளிகள் காலை தொட்டு வணங்கும் திமுகவின் இரட்டை வேடம் அம்பலப்படுகிறது.
சீர்திருத்தம் என்ற பெயரில் ஆட்சிக்கு வரும் எல்லா முதலாளித்துவ கட்சிகளும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு முன்னே அம்பலப்பட்டு நிற்கும் அதில் திமுகவும் விதிவிலக்கல்ல.
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தில் திமுக அரசும் தொழிலாளர் நலத்துறையும் அப்பட்டமாக சாம்சங் நிறுவனத்திற்கு ஆதரவாக வாதாடி தொழிலாளர்களுக்கு துரோகம் செய்துள்ளது.
இது குறித்து போராட்டத்தை ஒருங்கிணைத்து வரும் காஞ்சிபுரம் #CITU மாவட்டச் செயலாளர் தோழர் முத்துக்குமார் கூறுவதை படியுங்கள்.
————
சாம்சங் கார்ப்ரேட்டுக்காக தமிழக அரசும் தொழிலாளர் துறையும் வாதாடியுள்ளது
————-
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்வதை நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசு மற்றும் தொழிற்சங்க பதிவு சட்டவிரோத நடவடிக்கையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் சிஐடியு வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கு நேற்று (30-9-2024) உயர் நீதிமன்றத்தில் விவாதத்திற்கு வந்தது.
சாம்சங் நிறுவனம் தன் பெயர் கொண்டு ஒரு தொழிற்சங்கம் பதிவு செய்வதற்கு ஆட்சேபனை தெரிவித்திருக்கிறது.அதனால் தொழிற்சங்க பதிவை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று திமுக அரசின் சார்பில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தொழிலாளி வர்க்கத்திற்காக மூத்த வழக்கறிஞர் எம்.ஜி.ஆர் .பிரசாத் வாதாடினார்.
ஒரு தொழிற்சங்கத்தை பதிவு செய்வதற்கு தேவையான பதிவுச் சட்டத்தின் அடிப்படையில் அனைத்து முறையான ஆவணங்களும் சமர்பித்த பிறகு 45 நாட்களுக்குள் எந்த ஆட்சேபனையும் வராத நிலையில் சாம்சங் சமீபத்தில் கொடுத்திருக்கிற ஒரு ஆட்சேபனை மனுவை வைத்து தொழிற்சங்கத்தின் பதிவை நிறுத்தி வைத்திருப்பது என்பது தமிழக அரசு யாருடைய குரலாக செயல்படுகிறது?
சாம்சங் அடியாளாக தமிழக அரசு செயல்படுவது வேதனைக்குரியது.
அப்பல்லோ டயர்ஸ், ஜேகே டயர்ஸ், ஹூண்டாய்,யமஹா,கப்போரோ,ஏசியன் பெயிண்ட்ஸ், எல்என்டி இசிசி, பிரிட்டானியா பிஸ்கட் இண்டஸ்ட்ரி, மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆராய்ச்சிகளையும் இப்படி எல்லா நிறுவனங்களிலும் இந்த நிறுவனங்களின் பெயரில் தொழிலாளர்களின் சங்கம் என்கிற முறையில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதை பதிவு செய்து கொடுத்திருப்பதும் இதே தமிழக அரசின் தொழிலாளர் துறை தான்.
தொழிற்சங்க பதிவு சட்டம் மேற்கண்ட பெயர்களில் பதிவு செய்ய தடையாக இருந்தால் இவை எல்லாம் எப்படி பதிவு செய்யப்பட்டன?
இந்தந்த பெயர்களில் தான் பதிவு செய்ய வேண்டும் எந்தெந்த பெயர்களில் பதிவு செய்யக்கூடாது என்று தொழிற்சங்க பதிவு சட்டத்தில் ஏதாவது இடம் இருந்தால் அதை காரணம் காட்டி நீங்கள் அந்த பதிவை திருத்தம் கூறலாம்.
சட்டத்தில் இல்லாத ஒரு சரத்தை சாம்சங் நிறுவனம் சொல்லிவிட்ட காரணத்தினாலேயே அதுதான் எங்கள் அரசின் நிலை என்றால் ?
அரசு சட்டத்தின் ஆட்சியை செய்கிறதா சாம்சங் நிறுவனத்தின் ஆட்சியை செய்கிறதா ?
நீங்கள் யார் உங்களுக்கு வாக்களித்த மக்களுக்காகவா தொழிலாளர்களுக்காகவா ?
எங்கிருந்தோ வந்த சாம்சங் நிறுவனத்தின் கார்ப்பரேட்டுக்காகவா?
இரண்டு வார காலத்திற்குள் தீர்வு தெரிவிக்க வலியுறுத்தி வழக்குத் தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
அரசு இவ்வளவு பகிரங்கரமாக கார்ப்பரேட்டின் பக்கம் தான் என்று வெட்கம் கூச்சம் எதுவும் இன்றி தன்னை வெளிப்படுத்திக் கொள்வது என்ன மாடல் ?
போராடுகிற போக்குவரத்து தொழிலாளிகளுக்கு உரிமை மறுப்பு, ஊதிய மறுப்பு, அவனுக்கு உரிய பணமும் மறுப்பு.
உள்ளாட்சி ஊழியர்களுக்கு குறைவான சம்பளத்தை தீர்மானிக்கும் வெட்ககரமான செயல்.
போக்குவரத்து துறையில் அவுட்சோசிங் என்ற பெயரில் நிரந்தர தன்மையை நீக்கிவிட்டு ஒப்பந்த முறையில் கொண்டுவரும் அரசின் அதிகாரப்பூர்வ நடைமுறை கொள்கை.
அமைப்புசாரா தொழிலாளர்களின் 40 லட்சத்துக்கு மேற்பட்ட தரவுகளை அழித்துவிட்டு நாடகமாடும் தொழிலாளர்துறையின் குற்றவியல் செயல்.
சங்கம் சேர்கிற உரிமை போராடுகிற உரிமை கூட்டுபேற உரிமை எல்லாவற்றையும் காவு கொடுத்து அப்பட்டமாக கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக பகிரங்கமாக செயல்படும் இந்த அரசின் மாடல்
ஒருபோதும் மக்களுக்கான மாடல் அல்ல.
நிச்சயமாக சொல்கிறோம் தொழிலாளர் பிரச்சனையில் தமிழக அரசின் மாடல் கார்ப்பரேட் சார்பு மாடல்.
கார்ப்பரேட்டுக்கு நீதி வழங்கும் கார்ப்பரேட்டு சார்புள்ள ஒரு ஆட்சியில் “சமூக நீதி” “சம நீதி” என்பதெல்லாம் அலங்கார பேச்சே தவிர நிஜமல்ல.
மக்கள் பிரிவில் பெரும் பகுதியாக இருக்கிற தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் நீதி வழங்காத எந்த ஆட்சியும் நல்லாட்சி அல்ல.
இதற்கான போராட்டங்களும் தவிர்க்க முடியாத ஒன்றுதான்.
சட்ட ரீதியான போராட்டம் அமைப்பு ரீதியான போராட்டம்
களத்தில் எதிர்கொள்ளும் கம்பீரமான போராட்டம்
கார்ப்பரேட் மற்றும் அதற்கு ஆதரவான அரசு இவை இரண்டையும் எதிர்க்கும் நமது போராட்டம் தொடரவே செய்யும்…
நாம் வெல்வோம்…