Tamil Marx

ஏங்கெல்ஸ் கட்டுரைகள்

இளம் ஹெகலியவாதியாக ஏங்கெல்ஸ்

இளம் ஹெகலியவாதியாக ஏங்கெல்ஸ்
  • PublishedNovember 28, 2021

மனிதனின் உணர்வு நிலை அவனது வாழ்நிலையை நிர்ணயிப்பதில்லை மாறாக மனிதனின் வாழ்நிலைதான் உணர்வு நிலையை தீர்மானிக்கிறது

என்ற மார்க்சின் கண்டுபிடிப்புக்கு அசல் சாட்சியாக ஏங்கெல்ஸ் திகழ்கிறார். எங்கெல்ஸ்சின் இளமை காலத்தில் மேற்கு ஐரோப்பிய நாடுகளெங்கும் வர்க்கப் போராட்டம் தீவிரம் அடைந்து வந்தது. 1830 ஆம் ஆண்டு ஜூலை மாத புரட்சி இதன் திருப்புமுனையாக இருந்தது. அதேபோல இங்கிலாந்திலும் வர்க்கப் போராட்டம் தீவிரமடைந்து கொண்டிருந்தது 1832 ஆம் ஆண்டில் நாடாளுமன்ற சீர்திருத்தங்களால் தொழில்துறை முதலாளிகள் ஆட்சிக்கு வரும் வாய்ப்பை பெற்றிருந்தனர் அதே காலகட்டத்தில் இங்கிலாந்தில் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருந்தது சார்டிஸ்  இயக்கம். பிரான்சில் நடந்த ஜூலை மாத புரட்சி, ஜெர்மனியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. வெளிப்படையாக அரசியல் மேடைக்கு வரமுடியாத எதிர்ப்பு சக்திகள் இலக்கிய தத்துவார்த்த குழுக்களாக உருக்கொண்டு கலைப் படைப்பையும் தத்துவார்த்த கட்டுரைகளையும் வெளியிட்டு வந்தனர்.

இளம் ஹெகல்வாதிகள் என்றழைக்கப்பட்ட ஹெகலின் இடதுசாரி ஆதரவாளர்கள் இத்தகைய எதிர்ப்பு குழுக்களில் ஒரு குழுவாக செயல்பட்டு வந்தனர். வர்க்கப் போராட்டத்தை கடுமையாக ஒடுக்கி வந்த பிரஷ்ய முடியரசு அரசியல் துறையை தடை செய்யப்பட்ட ஒன்றாக மாற்றி இருந்தது. இதனால் இளம் ஹெகலியர்கள் பிரஷ்ய அரசின் முக்கியமான தூண்களில் ஒன்றான மதத்தின் மீது தமது கண்டனங்களை தொடுக்க தள்ளப்பட்டனர். இதற்கு முதல் விதையை போட்டவர் திரு டேவிட் ஷ்டிராவுஸ் ஆவார். அவர் எழுதிய இயேசுவின் வாழ்க்கை என்னும் புத்தகம் தான் எங்கெல்ஸ்சை தத்துவஞானம் பயிலத் தூண்டியது. 1840 இல் தனது நண்பர் கிரேபருக்கு எழுதிய கடிதத்தில் ஷ்டிராவுசின் உதவியால் இப்போது நான் ஹெகல்வாதத்தை நோக்கிய நேர் பாதையில் நிற்பதாகவும் ஒவ்வொரு மாலையும் ஹெகலின் வரலாற்றின் தத்துவவியல் என்ற நூலை பெரும் ஆர்வத்துடன் பயின்று வருவதாகவும் தெரிவித்தார். ஹெகலை பயின்று வந்த ஏங்கல்ஸ் அதே காலக்கட்டத்தில் ஹெகலியத்தை மறுத்து மதவாதத்திற்குள் தத்துவ ஞானத்தை நூழைக்கும் ஷெல்லிங்  போன்ற மிகப்பெரிய தத்துவவாதிகளுடன் சண்டையிட்டும் வந்தார். ஹெகலிய  தத்துவ ஞானத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்க்க விரும்பிய ஷெல்லிங்குக்கு எதிராக ஹெகலிய தத்துவ ஞானத்தில் உள்ள முற்போக்கு அம்சங்களை ஆதரித்து எழுதினார் எங்கெல்ஸ்.  இந்தக்காலக்கட்டத்தில் அதாவது 1841- ஆம் ஆண்டு ஏங்கல்ஸ் பெர்லினுக்கு வந்து சுய விருப்பத்தோடு இராணுவ சேவையாற்றினார். அப்போது கிடைத்த ஓய்வு நேரங்களில் சுதந்திர மாணவர் என்ற முறையில் பெர்லின் பல்கலைக்கழகத்திற்கு சென்று அங்கு நடக்கும் தத்துவஞானம் பற்றிய விரிவுரைகளில் கலந்துக்கொண்டு கவனித்து வந்தார்.அப்போது இளம் ஹகலியர்கள் குழுவோடு நட்பு ஏற்படுத்திக்கொண்டார். இளம் ஹெகலியவாதிகளான எட்கர் பௌவர் சகோதரர்கள்,மாக்ஸ் ஷ்டிர்னர்,கார்ல் கியோப்பன் போன்ற முக்கியமானவர்களோடு ஏங்ங்கெல்ஸ் இணைந்து பணியாற்றினார்.இளம் ஹெகலியர்கள் நடத்தி வந்த பத்திரைகைகளில் புனைப்பெயரில் பல கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார்.

எட்கர் பௌவருடன் சேர்ந்து 1842 ஆம் ஆண்டு ‘’பைபிள்- துனிவான கொலைக்கு அற்புதமான மருந்து அல்லது நம்பிக்கையின் வெற்றி” எனும் கதையை ஏங்கல்ஸ் எழுதினார். இந்த கதை தத்துவஞானப் பிற்போக்கிற்கும்,மத சீர்திருத்த விரோதிகளுக்கும் எதிரான இளம் ஹெகலிய வாதிகளின் கருத்தாக்கத்தை மையாமாகக் கொண்டிருந்தது. இளம் ஹெகலியர்களுடன் தான் மார்க்சும் பணியாற்றினார் ஆனால் ஏங்கெல்ஸ் பெர்லினுக்கு வருவதற்கு முன்னதாகவே 1841 வசந்த காலத்திலேயே மார்க்ஸ் பெர்லினை விட்டு சென்றிருந்தார். ஆனால் இளம் ஹெகலிய வாதிகளிடம் இருந்து மார்க்சை பற்றி ஏங்கெல்ஸ் தெறிந்துக்கொண்டார். 1842 ஆம் ஆண்டு ‘’ரைன் பத்திரிகை’’ யில் மார்க்ஸ் பணியாற்றியபோது ஏங்கெல்ஸ்சின் சில கட்டுரைகளை மார்க்ஸ் அந்த பத்திரிகையில் வெளியிட்டார். இந்த காலகட்டத்தில்  ஹெகலை தீவிரமாக ஆதரித்த  ஏங்கல்ஸ் அவரிடம் குறைகள் இருப்பதை கண்டு மேலும் தத்துவஞானம் குறித்த தேடுதலை தீவிரப்படுத்தினார்..அதேபோது பல அரசியல்-பொருளாதார, தத்துவார்த்த கட்டுரைகளையும் எழுதி வெளியிட்டார். முடியரசின் மீது அளவு கடந்த வெறுப்பு, ஒடுக்கப்பட்டு கிடந்த மக்களின் மீது ஆழ்ந்த அனுதாபம் ,மகத்தான புரட்சிகர மனப்பாங்கு ஆகியவற்றை இந்தக் கட்டுரைகளில் காண முடிந்தது. அதே நேரத்தில் ஹெகலின் தத்துவார்த்த கருத்துக்களிலும் முழுமையாக உடன்பட முடியவில்லை என்று தனது நண்பர் கிரேபருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்..

1843 -ஆம் ஆண்டு இராணுவச் சேவைக்காலம் முடிந்து சொந்த ஊரான பார்மெனுக்கு வந்திருந்தபோது அவரை அவர் தந்தையார் பிரிட்டனில் உள்ள மான்செஸ்டரில் எங்கல்சின் தந்தையார் பங்குதாரராக இருக்கும் “எர்மன் மற்றும் எங்கல்ஸ்” என்ற நெசவாலையில் வேலைக்கு சேரும்படி கேட்டுக்கொண்டார். மகனுடைய போக்கில் மாற்றத்தை கண்ட தந்தைக்கு அவரை எப்படியாவது நாடு கடத்திவிட்டால் அவர் மாற்றமடைய முடியும் என தப்புக்கணக்குப் போட்டுவிட்டார்.ஆனால் பிரிட்டன் ஏங்கெல்ஸை புரட்சியாளனாக மாற்றபோவதை அவர் அறிந்திருக்கவில்லை. பிரிட்டனுக்கு வந்த எங்கெல்ஸ் மான்செஸ்டர் நகரில் வாழும் தொழிலாளர்களின் நிலையை கண்டு அவர் எழுதிய முதல் கட்டுரையில் பிரிட்டனில் புரட்சி வருவதற்கு சாத்தியமுண்டா? வாய்ப்பு உண்டா? என்ற கேள்வியுடன் தொடங்கினார். தான் எழுதிய பிரிட்டிஷ் தொழிலாளி வர்க்கதின் நிலைமை என்ற புத்தகத்தை பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு அர்ப்பணித்தார். இங்கிலாந்து அவருடைய வாழ்க்கையை முழுமையாக தொழிலாளி வர்க்கத்தின் பக்கம் நகர்த்தியது.

முந்தைய கட்டுரைக்கு இங்கே சொடுக்கவும் ஷ்டிராவுஸ்வாதியாக இளம் ஏங்கெல்ஸ்..

Written By
Editorial Desk

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *