பாசிசத்திற்கு எதிராக களம் காண்போம்-பேரா. விஜய் பிரசாத்
உலகப் போரில் பாசிசத்தைத் தோற்கடிப்பதற்காகச் சீனாவிலும் சோவியத் ஒன்றியத்திலும் கோடிக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். இன்று மீண்டும் ஏகாதிபத்தியத்தின் இராணுவமயமாக்கல் தீவிரமடைந்து வரும் நிலையில், “பனிபோர் வேண்டாம்” (No Cold War) என்ற கூட்டு இயக்கம் சமாதானத்திற்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சீனா மீதான ஜப்பானின் ஆக்கிரமிப்புக்கு எதிரான சீன மக்களின் போர் அருங்காட்சியகம் ஒன்றை சீன மக்கள் உருவாக்கியுள்ளனர். அதனை காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அந்த அருங்காட்சியகத்தை பார்த்தபோது போர் மற்றும் ராணுவத்திற்கு ஆதரவான நிலைபாட்டை வெறுக்க வைக்கிறது. மார்க்கோ போலோ (லுகோவ்) பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், ஜப்பான் இராணுவத்தின் கொடுரமான வன்முறையை காட்டுகிறது.
நாஞ்சிங் படுகொலை (1937–1938) ஹார்பின் நகரில் நடத்திய கொடூரமான உயிரியல், இரசாயனப் போர்கள் மற்றும் சட்டவிரோத மனிதப் பரிசோதனைகள் (1936–1945). ஜப்பானின் இராணுவத்திற்காகப் பாலியல் அடிமைகளாகப் பிடிக்கப்பட்டு “ஆறுதல் பெண்கள்” என்ற பெயரில் பாலியல் அடிமைகளாக பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த முகாம்கள் என அந்த அருங்காட்சியகத்தில் உருவாக்கப்பட்டிருந்த காட்சிகள் மனதை உலுக்கியது.
ஜப்பான் ராணுவம் மற்றும் சீன மக்களுக்கும் இடையே 1937 முதல் 1945 வரை நடந்த இந்தப் போர் தான் இரண்டாம் உலகப் போரின் மிக நீண்ட பகுதியாகும். இதில் குறைந்தது இருபது மில்லியன் சீன குடிமக்களும் ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டனர், 80 மில்லியன் மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். சீனாவின் உட்கட்டமைப்பில் பெரும் சேதம் ஏற்பட்டது. குவாங்டோங்கிற்கு அருகிலுள்ள பேர்ல் நதி டெல்டாவில் 30 சதவீதம் அளவிலான உள்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன. ஷாங்காய் நகரில் பாதிக்கும் 50 சதவீதத்திற்கும் மேல் அழிந்தது. அன்றைய சீனாவின் தலைநகரான நாஞ்சிங்கின் 80 சதவீதம் தரைமட்டமானது.
இவ்வாறு ஜப்பான் இராணுவத்தின் ” Three Alls Policy ” (எரித்தல், கொல்லுதல், கொள்ளையடித்தல்) இனப்படுகொலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருந்தது.
இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட மரண எண்ணிக்கை குறித்தான விவாதங்கள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. எனினும் இராணுவ வீரர்கள் மற்றும் மக்கள் என சோவியத் ஒன்றியத்தில் 27 மில்லியன் (தற்போதைய ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை) மற்றும் சீனாவில் 20 மில்லியன் நபர்கள் கொல்லப்பட்டனர் (தற்போதைய சிலியின் மக்கள் தொகை).
நாஜி போர்க் குற்றங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட சோவியத்தின் உயர் மட்ட ஆணையம் (ChGK) 1941 இல் நாஜி உயர்தளபதியால் பசித் திட்டம் (Hunger Plan) என்ற பெயரில் நடத்தப்பட்ட படுகொலைகள் பற்றிய விவரங்கள், சோவியத் மக்களின் பெரும் தியாகங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த கொடூர திட்டத்தின் விளைவாக மட்டும் 4.2 மில்லியன் சோவியத் குடிமக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான அரசின் நிர்வாகத் திறமையின்மையால் தான் இந்த மரணங்கள் நடந்தன என மேற்குலக நாடுகள் பிரச்சாரம் செய்தன.
நாம் கையாள்வது புரிந்துகொள்ள முடியாத எண்களாகும். ஒரு 1 மில்லியன் நபர்கள் இங்கே கொல்லப்பட்டனர். சில ஆயிரம் பேர் அங்கே கொல்லப்பட்டனர். மற்றொரு லட்சம் பேர் வேறெங்கோ என மரண பட்டிடயல் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மரணத்தின் கணக்கு விவரங்களை எந்தவொரு அலுவலகமோ அல்லது அரசாங்கமோ ஜீரணிக்க முடியாது. போரின் கொடுரம் அத்தகையதாக உள்ளது.
பாசிசம் மற்றும் இராணுவவாதத்திற்கு எதிரான இந்தப் போர் முடிவடைந்து (3 செப்டம்பர் 1945) 80 ஆண்டுகள் நிறைவடைந்த இந்த நேரத்தில், ‘நோ கோல்ட் வார்’ குழு அமைதிக்கான ‘சாண்டியாகோ அப்பீல்’ என்ற கோரிக்கையை தயாரித்துள்ளது.
அந்த கோரிக்கையின் முக்கியப் பகுதிகள்:
- போர் என்பது மனிதனின் படைப்புத் திறனையும், வாழ்வையும், வாழும் உலகத்தையும் முற்றிலுமாக அழிக்கும் செயலாகும்.
- 80 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா முதல் அணுகுண்டை வீசியது. அது இன்று வரை நம்மை அச்சுறுத்தும் ஆயுதமாக உள்ளது.
- பாசிசத்தையும் இராணுவவாதத்தையும் வீழ்த்துவதற்காக மில்லியன் கணக்கானோர் உயிரிழந்தனர். அந்தப் போராட்டத்தில் சோவியத் மற்றும் சீன மக்கள் பல தியாகங்கள் செய்தும், கனமான சுமைகளை ஏற்றும் முக்கிய பங்காற்றினர்.
- அவர்களின் தைரியம் வெறும் நினைவுகளாக மட்டும் நிற்காமல் அது நம்மை செயல்பட துண்டுகிறது.
- ஏகாதிபத்தியம் மற்றும் பேராசையால் நடந்து வருகிற முடிவில்லா வன்முறை மற்றும் போரின் சுழற்சியை நிராகரித்து, சமாதானம், நீதி மற்றும் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கபட்ட வளம் இவையாவும் நிலவும், மனிதகுலமாக நாம் இயற்கையுடன் இணக்கமாக வாழ்ந்து, வருங்கால தலைமுறைகளுக்காக பூமியைப் பாதுகாக்க வேண்டும் என நாங்கள் கேட்கிறோம்.
- இப்போதே ஆயுதங்களை கை விடுங்கள், இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வந்து, அனைத்து உயிர்களும் வளமாக வாழக்கூடிய ஒரு உலகத்தைக் கட்டியெழுப்புங்கள்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் ஆகஸ்ட் 15-அன்று அலாஸ்காவில் சந்தித்தனர். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யா மற்றும் அமெரிக்க அதிபர்களுக்கு இடையே நடந்த முதல் சந்திப்பு இது தான்.
இச்சந்திப்பில் எந்த முன்னேற்றமும் இல்லை, அமெரிக்கா-ரஷ்யா அல்லது அமெரிக்கா-சீனா பதட்டங்களைக் குறைக்க எந்த முன்னேற்றமும் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பேச்சுவார்த்தை முக்கியமானவை. இது சர்வதேச உறவுகள் மற்றும் அமைதியை நிலைநாட்டுவதற்கு முக்கியமாகும். காசா முதல் சூடான் வரை உலகின் பல பகுதிகளில் – இதயத்தை உறைய வைக்கும் போர்கள் தொடர்கிறது. இந்த சூழலில் மேலும் ஒரு போரை நடத்துவதற்கான ஆசை (‘appetite for further war’) முற்றிலும் இல்லை என்ற நிலைப்பாடு நிலவுகிறது.
புடின்-டிரம்ப் சந்திப்பின் போது, போப் லியோ XIV அவர்கள், “இன்று, உலகெங்கிலும் பரவிவரும் வன்முறையின் முன், நாம் துரதிர்ஷ்டவசமாக சக்தியற்றவர்களாக உணர்கிறோம். இந்த வன்முறை, மனிதநேயத்தின் எந்த ஒரு உணர்வுக்கும் செவிசாய்க்காமல் (கவனம் கொடுக்காமல்) செவிடாக உள்ளது,” என்று கூறினார். அதாவது, வன்முறை என்பது இப்போது எதையும் கேட்கத் தயாராக இல்லாத ஒரு கொடூரமான சக்தியாக மாறிவிட்டது என்பதே அதன் பொருள். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் எண்ணமும் இதுதான் என பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தொடர அவர் வலியுறுத்து செயலை குறிப்பிட்டு விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
போரில் இருந்து எழும் பெரும் சத்தம் கேட்டுகொண்டிருக்கும் போதே, வன்முறை மற்றும் அமைதி என்ற இரண்டு எதிரெதிர் எண்ணங்கள் நம் மனதில் எழுவது ஆச்சரியமில்லை.
லெனின்கிராட் முற்றுகையின்போது (1941–1944) வாழ்ந்த கென்னடி கோர் (1907–1981), அந்த அனுபவங்களைப் பற்றி “The creek sick of speech” என்பதை “பேசி பேசிக் களைப்புற்ற சிற்றோடை” என்ற தலைப்பில் கவிதை ஒன்றை எழுதினார்.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள்கூட, போர்களின் போது மிகவும் கொடூரமான (barbaric) செயல்களுக்குப் பயன்படுத்தப்படுவதால், போருக்கும் அறிவியல் புனைகதைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
பேசி பேசிக் களைப்புற்ற சிற்றோடை,
“நான் எந்தப் பக்கமும் இல்லை” என்று தண்ணீரிடம் கூறியது.
அமைதியால் சலிப்படைந்த தண்ணீர்,
உடனே மீண்டும் கத்தத் தொடங்கியது.
பேராசிரியர் விஜய் பிரசாத் எழுதிய 34 ஆவது செய்தி மடல்
தமிழில் தோழர் தீபக்