பெட்ரோ டாலருக்கு முடிவுரை எழுதும் டிரம்ப்-சுதிர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தனது “உச்சகட்ட அழுத்தம்” கொள்கையைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். இது 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர்ப் பதற்றத்தை உருவாக்கியது.
குறிப்பாக, ஈரானின் ஜெனரல் காசெம் சுலைமானியை 2020 ஆம் ஆண்டு அமெரிக்கா படுகொலை செய்ததும், அதற்கு பதிலடியாக ஈரான் அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதும் உலகை அச்சுறுத்தின.இருப்பினும், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு ஒரு அடிப்படைத் தோல்வியாகவே அமைந்தது.
2017 இல் டிரம்ப் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேறி, ஈரான் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயன்றார்.
இதற்காக ஐரோப்பிய மற்றும் பிற ஆசிய நாடுகளை அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு ஆதரவளிக்க டிரம்ப் வலியுறுத்தினார்.
ஆனால், அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சமான, ஆக்ரோஷமான நடவடிக்கையை பல நாடுகள் ஏற்க மறுத்தன. அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான போரில் ஈடுபட அவை தயங்கின. இது ஈரானை பணிய வைப்பதற்கு பதிலாக, சர்வதேச அரங்கில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்தியது.இந்தத் தோல்வியின் மிக முக்கியப் பகுதி பொருளாதார ரீதியானது. பொருளாதார அறிஞர் தாமஸ் ஐசக் சுட்டிக்காட்டியபடி, அமெரிக்காவின் உண்மையான பலம் அதன் ராணுவ வலிமையில் மட்டுமல்ல, “பெட்ரோடாலர்” என்ற அமைப்பிலும் உள்ளது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் டாலர்களில் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட வேண்டும் என்ற இந்த அமைப்பு, அமெரிக்காவிற்கு அபரிமிதமான அதிகாரத்தை அளிக்கிறது. டிரம்ப் இந்த டாலர் அதிகாரத்தை ஈரான் போன்ற நாடுகளுக்கு எதிராக ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார்.
அமெரிக்கத் தடைகளால் டாலர் வர்த்தகத்தைத் தொடர முடியாத ஈரான், புதிய பொருளாதாரக் கூட்டணிகளைத் தேடியது. குறிப்பாக, சீனாவுடனான வர்த்தகத்திற்கு டாலருக்குப் பதிலாக சீன யுவானைப் பயன்படுத்தத் தொடங்கியது.
கச்சா எண்ணெய் விற்பனைக்கு யுவானைப் பயன்படுத்துவது “டீ-டாலரைசேஷன்” (டாலர் பயன்பாட்டைக் குறைத்தல்) என்ற புதிய போக்குக்கு வழிவகுத்தது. இது தாமஸ் ஐசக் கூறுவது போல, அமெரிக்காவின் நிதி மேலாதிக்கத்திற்கு விடுக்கப்பட்ட மிகப்பெரிய சவாலாகும்.
ஈரானை பணிய வைக்க முயன்று, டிரம்ப் பொட்ரோடாலர் மேலாதிக்கத்தையே சிதைக்கத் தொடங்கிவிட்டார்.
முடிவாக, டிரம்ப்பின் ஈரான் கொள்கை ஒரு முழுமையான தோல்வி. அவர் ஈரான் ஆட்சியைக் கவிழ்க்கவும் முடியவில்லை, அணுசக்தி ஒப்பந்தத்தைத் திரும்பப் பெறச் செய்யவும் முடியவில்லை.
மாறாக, அமெரிக்காவின் சர்வதேச நம்பகத்தன்மையைக் குறைத்து, தனது நட்பு நாடுகளை அந்நியப்படுத்தினார். மிக முக்கியமாக, பொட்ரோடாலர் அமைப்புக்கு முடிவுரை எழுதத் தொடங்கி, அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்திற்கு ஆபத்தை விளைவித்துவிட்டார்.
– சுதிர்