இலைகளை சாப்பிட்டு உயிர் பிழைக்கும் சூடானியர்கள்
உங்களுக்கு அதிக பசி இருக்கும் போது இலைகளை கொடுத்து சாப்பிடக் கூறினால் எப்படி இருக்கும்?
கோவப்படுவீர்கள் சரியா?
ஆனால் சூடானில் உள்ள மக்கள் பசியில் சாகாமல் இருக்க இலை தழைகளை தான் சாப்பிடுகின்றனர்.
சூடான் நாட்டில் 2023 ஏப்ரல் மாதம் அந்நாட்டு ராணுவத்திற்கும் rapid support force என்ற அதிவிரைவு படைக்கும் இடையே சண்டை உருவாகி உள்நாட்டு போராக மாறியது.
இந்த உள் நாட்டுப் போரினால் 1 கோடிக்கும் அதிகமான சூடான் மக்கள் உள் நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு (IOM) அறிவித்துள்ளது.
20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளிநாடுகளுக்கு அகதிகளாக விரட்டப்பட்டுள்ளனர் எனவும் அதில் பெரும்பகுதியிலான மக்கள் அண்டை நாடுகளான சாட், தெற்கு சூடான் மற்றும் எகிப்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர் எனவும் ஐ.நா. இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மொஹமதலி அபுனஜெலா தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி சூடானுக்குள் இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 1 கோடியை தாண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த போரின் காரணமாக 16,000 க்கும் அதிகமான மக்கள் படு கொலையாகியுள்ளனர். உணவுக் கிடங்குகளை கொள்ளையடித்து செல்வது, விவசாய நிலங்களை அழிப்பது, ஐ.நா நிவாரண வாகனங்களை கொள்ளையடிப்பது என போரில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் அராஜகம் செய்து வருவதால் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த செயற்கையான உணவுப் பற்றாக்குறை காரணமாக உருவாக்கப்பட்டுள்ள வறுமையால் சூடான் மக்கள் புல் மற்றும் மர இலைகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த வறுமையால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடுகள் ஆபத்தான உச்சத்தை எட்டியுள்ளது என்று ஐ.நா வின் உலக உணவு திட்டமும் (WFP) எச்சரிக்கை விடுத்துள்ளது.
சூடானில் 18 மாநிலங்களில் 12 மாநிலங்களுக்கு பரவியுள்ள உள்நாட்டுப் போரால் லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்தில் தள்ளப்பட்டுள்ள சூழலில் தற்போது உருவாகி யுள்ள மனிதாபிமான பேரழிவைத் தடுக்க ஐ.நா மற்றும் சர்வதேச சமூகத்திலிருந்து விடுக்கப்படும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றது.எனினும் இரு தரப்பும் அமைதி உடன்படிக்கைக்கு தயாராக இல்லை.