Tamil Marx

கட்டுரைகள்

பேரிடரும் கேரள மக்கள் ஒற்றுமையும்

  • PublishedAugust 3, 2024

கேரள மாநிலம் வயநாட்டில் வரலாறு காணாத அளவுக்கு நிலச்சரிவும் மனித உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.. 2018/19ஆம் ஆண்டுகளில் இதே போல நிலச்சரிவும், வெள்ளமும் ஏற்பட்ட போதும் , பின்னர் கோவிட் பாதிப்புகள் ஏற்பட்ட போதும் , கேரள மக்கள் ஒரே மனிதனாக நின்று அந்த பேரிடர்களை சந்தித்து வென்றனர்.

அதற்கு முதல்வர் தோழர் பினராயி விஜயன் மற்றும் எல்டிஎப் ( இடதுசாரி கூட்டமைப்பு ) இயக்கங்களும் தலைமை தாங்கி ஒருங்கிணைப்புச் செய்தன. ஏனைய சமூக அமைப்புகளும் அனைத்து கேரள மக்களும் தமது பங்கை அளித்தனர். இதே போல இந்த பேரிடரிலிருந்தும் கேரளா மீண்டு எழும். இத்தகைய பேரிடர்களின் பொழுது போர்க்கால அடிப்படையில் செயல்படுவது மிக முக்கியம்.
அதே சமயத்தில் இந்த பேரிடர்கள் வருவதை கணிப்பதும் அதனை தடுக்க வேண்டிய செயல்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த பேரிடரை தமது சுயநலனுக்காக சில அரசியல் சக்திகள் பயன்படுத்த முனைந்துள் ளன. இதனையும் கேரள மக்கள் நிராகரிப்பார்கள் என்பது நிச்சயம்.

கேரளாவின் தனித்தன்மை

பேரிடரில் சூரல்மலை மற்றும் முண்டகை பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகள் நொடிப்பொழுதில் காணாமல் போயுள்ளன. நிலச்சரிவு இரவில் நடந்ததால் என்ன நடக்கிறது என மக்கள் தெரிந்து கொள்ளும் முன்னரே மரணம் அவர்களை சாய்த்துவிட்டது. தப்பித்த வர்கள் மிகப்பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ள னர். அவர்களுக்கு உளவியல் சிகிச்சை தேவை என்பதை அமைச்சர் வாசவன் முக்கிய அம்சத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மிக மிக வேகமாக நிவாரணப்பணிகள் முடுக்கிவிடப் பட்டன. அந்த பகுதிக்கு 5 அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர். மாநில பேரிடர் நிவாரண குழுக்கள்/மத்திய குழுக்கள்/ ராணுவம் ஆகியவை உடனடியாக களம் இறங்கியது மட்டுமல்ல; மிக உன்னதமான முறையில் நிவாரணப்பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

வழக்கம் போல எல்டிஎப் கட்சிகளின் வெகுமக்கள் அமைப்புகள் மாநிலம் முழுதும் களத்தில் இறங்கின. வாலிபர்/மாதர்/ மாணவர் அமைப்புகளின் ஊழியர்கள் பலர் வயநாடு பகுதிக்கு வந்து தம்மை நிவாரணப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டனர். மற்றவர்கள் மாநிலம் முழுவதிலிருந்தும் நிவாரணப்பொருட்களை சேகரித்து அனுப்பி வைக்கத் தொடங்கினர்.
சிபிஐ(எம்)இன் அனைத்து கிளைகளும் உடனடியாக வயநாட்டு பேரிடருக்கு உதவிட முன்வர வேண்டும் என மாநில செயற்குழு அறிக்கை வெளியிட்டது. கேரளாவின் தனித் தன்மை என்பது இதுதான்! அரசு இயந்திரம் மட்டுமல்ல; வெகு மக்கள் அமைப்புகளும் ஏனைய சமூக அமைப்புகளும் எவ்வித உத்தரவுக்கும் காத்திராமல் நிவாரணப்பணி களில் ஈடுபடுவது என்பது கேரளாவின் தனித்தன்மை.


அரசு இயந்திரம் எவ்வளவு வேகமாகச் செயல்பட்டது என்பதை பேரிடர் நிகழ்ந்த அடுத்த நாளே சூரல்மலைப்பகுதிக்கு மின்சாரம் மீட்கப்பட்டது என்பதிலிருந்து அறியலாம். பல கல்லூரிகளில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன.

ஒரு சில மணி நேரங்களில் பல உடல்கள் உடற் கூறாய்வு செய்யப்பட்டன. அடையாளம் காணப்பட்ட உடல்கள் உறவினர் களிடம் தரப்பட்டன. காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்றனர். ஏராளமான உதவி முகாம்கள் திறக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டனர். சரிவுகளில் சிக்கிய வடமாநில தொழிலாளர் குடும்பங்கள் உட்பட பலர் மீட்கப்பட்டனர். எனினும் உயிரிழப்புகள் எண்ணிக்கை அதிகம் என்பது மட்டுமல்ல; இன்னும் அதிகரிக்கக் கூடும் எனும் கவலை உள்ளது.

எல்டிஎப்-ஐ இழிவுபடுத்தும் எதிர் சக்திகள்

இந்த பேரிடர் மனிதாபிமானம் உள்ள எந்த ஒரு மனிதனிடமும் அனுதாபத்தை விளைவிக்கும். ஆனால் சங்கிகளுக்கு அப்படி அல்ல. இதனை முன்வைத்து கேரள மக்களை இழிவுபடுத்துவது எப்படி என்பதுதான் அவர்களது முன்னுரிமை. பேரிடரில் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உடனடியாக உதவி தர வேண்டும் எனவும் இதனை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் கேரளாவின் அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

அது தொடர்பான உரைகளை கூட பா.ஜ.க.வினர் கூச்சல் போட்டு தடுக்க முனைந்தனர். கேரளா அரசாங்கம் கோரிய ரூ. 5000 கோடி கோரிக்கையும் ஒன்றிய அரசின் காதுகளில் விழவில்லை. ஒன்றிய அரசின் துறைகள் தந்த மழை பற்றிய எச்சரிக்கையை எல்டிஎப் அரசாங்கம் உதாசீனப்படுத்தியது எனும் பெரும் பொய்யை அமித்ஷா நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். உண்மையான தரவுகளுடன் இந்த பொய்யை பினராயி விஜயன் அவர்கள் அம்பலப்படுத்தினார். பொய்யே தமது அரசியல் வாழ்வாகக் கருதுபவர்களிடம் வேறு எதனை எதிர்பார்க்க இயலும்? அவையில் பொய் சொன்னதற்காக அமித்ஷா மீது உரிமை மீறல் மனுவை சிபிஎம் உறுப்பினர் தோழர் சிவதாசன் தாக்கல் செய்துள்ளார்.

2020ஆம் ஆண்டு நடந்த நிலச்சரிவின் பொழுது சுமார் 70 பேர் உயிரிழந்தனர். அப்பொழுது மோடி அரசு உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் தருவதாக அறிவித்தது. ஆனால் இது நாள் வரை அந்த உதவி வந்து சேரவேயில்லை என மலையாள மனோரமா இதழ் அம்பலப்படுத்தியுள்ளது. இதைப்பற்றி கவலைப்படாத அமித்ஷா இப்பொழுது கூசாமல் பொய் சொல்கிறார். அமித்ஷாவின் இயக்கத்தை சார்ந்த சங்கிகளோ சமூக ஊடகங்களில் கேவலமாக கேரள மக்களை இழிவுபடுத்தினர். சில உதாரணங்கள்:

சங்கிகளின் கேவலமான பிரச்சாரம்


“கேரளாவுக்கு ராணுவத்தையும் விமானப்படையையும் அனுப்பாதீர்கள். அவர்களுக்கு ராணுவம் மீது வெறுப்பு உள்ளது. இப்பொழுது உதவியை வெட்கமில்லாமல் கேட்கிறார்கள்”.“கடவுள் தனது சொந்த தேசத்தை மீட்டுக்கொள்கிறார். இதில் கவலைப்பட என்ன உள்ளது?”


பாஜகவை தோற்கடித்ததற்காக இப்படிதான் கடவுள் உங்களை தண்டிக்கிறார்.”


“கேரளாவுக்கு செல்லும் ராணுவம் இந்தி பேசலாமா? கூடாதா? ஒரு பேச்சுக்கு கேட்கிறேன்”


“அவர்கள் பாஜக தோற்க வேண்டும் என நினைக்கின்றனர். கிறித்துவத்தை ஆதரிக்கின்றனர்; கேரளாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயல்கின்றனர். இந்தியை ஏற்றுக்கொள்வது இல்லை; பாஜக தோற்க வேண்டும் என எண்ணுபவர்கள் இப்பொழுது ஏன் மோடியிடம் உதவியை கேட்கின்றனர்?”


“அவர்கள் எல்லாம் துன்பப்பட வேண்டும். இது அவர்களது கர்ம பலன்.

 

இயற்கைக்கும் விலங்குகளுக்கும் மிகவும் கொடூரங்களை விளைவிக்கும் மாநிலம் இது”


“கேரளாவுக்காக பிரார்த்திக்க வேண்டுமாம்! நீங்கள்தான் இந்து கடவுள்களை தரம்தாழ்த்துபவர்கள் அல்லவா! உங்களுக்காக பிரார்த்திக்க நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல”


“கேரளாவுக்கு ஒரே வாய்ப்புதான் உள்ளது. பாலஸ்தீன கடவுள்கள் காப்பாற்றட்டும்”
“உங்களுக்கு வட இந்திய ராணுவம் வேண்டாம். கேரளாவின் ராணுவத்தையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்”


சங்கிகளின் கொடூரமான உளவியலை இது வெளிப்படுத்துகிறது எனில் மாநிலத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரில் சிலரும் சங்கிகளுடன் இணைந்து மோசமாகச் செயல்படுகின்றனர். இந்த பேரிடர் நிகழ்ந்தவுடன் எவ்வித வேண்டுகோளும் இல்லாமலேயே பலர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி அனுப்ப தொடங்கிவிட்டனர்.

ஆனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரும் சங்கிகளும் முதலமைச்சர் நிதி ஊழல் நிறைந்தது எனவும் அதற்கு நிதி அனுப்ப வேண்டாம் எனவும் சமூக ஊடகங்களில் பதிவுகளை போட்டனர். லோக் ஆயுக்தா அமைப்பே இந்த நிதி ஊழல் நிறைந்தது என்று கூறியுள்ளது எனவும் ஒரு மகா பொய்யை அவர்கள் கூறினர்.

இத்தகைய பொய்யின் அடிப்படையில் கேரளாவின் லோக் ஆயுக்தாவில் 2023ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடரப்பட்டது. கேரளா முதல்வர் நிவாரண நிதியில் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என லோக் ஆயுக்தா தெளிவான தீர்ப்பு அளித்துள்ளது. இந்த நிதி எதிர்க்கட்சி உறுப்பினர்களும் அடங்கிய சட்டமன்றக் குழு மட்டுமல்லாது அரசு தணிக்கை ஆணையமும் ஆய்வு செய்கிறது.

அப்படி இருந்தும் ஒரு சில காங்கிரஸ் ஊழியர்களும் சங்கிகளும் பொய்ப் பிரச்சாரத்தை கேரளாவில் மட்டுமல்லாது, வளைகுடா நாடுகளிலும் வலுவாக முன்னெடுக்கின்றனர். இப்படி 194 தவறான சமூக ஊடக பதிவுகளை கேரளா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவு கண்டுபிடித்து 14 முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளது.

இத்தகைய பேரிடரின் பொழுது உதவி கேட்டு வேண்டுகோள் விடுப்பது இயற்கையானது மட்டுமல்ல; தேவையும் கூட! ஆனால் தான் முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர் என கூறிக்கொள்ளும் கே.சி.ஜோசப் என்பவர் எக்ஸ் தளத்தில் “இப்பொழுது நிவாரணப் பணிதான் முக்கியம். நன்கொடைகள் கேட்கக் கூடாது” என பதிவிட்டுள்ளார்.

பல மாநிலங்களை போல கேரளாவும் ஒன்றிய அரசால் நிதி அநீதிக்கு உள்ளாகியுள்ளது என்பதை அறிந்தும் இப்படி அறிவுரை வழங்கும் காங்கிரஸ் தலைவரின் நோக்கம் என்ன? “கேரளாவுக்கு நிதி கொடுக்க இது தருணம் அல்ல” என பாஜகவின் சுரேஷ் கோபி கூறியுள்ளார். சில காங்கிரஸ்காரர்களின் சிந்தனை பாஜகவினர் சிந்தனையோடு ஒன்றிசைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் காங்கிரஸ் தலைவர் சதீசன் போன்றோர் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி தருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தல்களுக்கு பின்னர் எல்டிஎப்ஐ தனிமைப்படுத்தும் வாய்ப்பு அதிகரித்துள்ளது என இவர்கள் எண்ணுகின்றனர் போலும்! ஆனால் மக்களின் ஆதரவை பெற்று மீண்டும் முன்னுக்கு வரும் ஆற்றல் எல்டிஎப்க்கு உள்ளது என்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

சூழல் பாதுகாப்பும் மக்கள் வாழ்வாதாரமும்

எல்டிஎப் மீது தாக்குதல் வரும் இன்னொரு திசைவழி சூழலியல்வாதிகளிடமிருந்து! சூழலியல் எச்சரிக்கைகளை எல்டிஎப் அரசாங்கம் புறம் தள்ளியது என 31.07.2024 இந்து இதழுக்கு மாதவ் காட்கில் பேட்டி அளித்துள்ளார். இப்படி பல சூழலியல்வாதிகளும் விமர்சனம் முன்வைத்துள்ளனர்.

இத்தகைய விமர்சனங்கள் இப்பொழுது வெளிப்படுத்துவது எல்டிஎப்க்கு எதிராக அவை பயன்படுத்தப்படும் என்பதை தெரிந்தோ அல்லது தெரியாமலோ இந்த கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. பல ஊடகங்கள் எல்டிஎப்க்கு எதிராக இந்த அறிக்கைகள் மற்றும் பேட்டிகளை பயன்படுத்துகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் சூழலியல் அம்சங்கள் கவனமாக கையாளப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க இயலாது.

எனினும் எத்தகைய சூழலியல் நடவடிக்கையும் இரு முரண்பட்ட அம்சங்களை உள்ளடக்கியது. ஒன்று சூழலியல் பாதுகாப்பு எனில், இன்னொன்று மக்களின் வாழ்வாதாரம். இரண்டுமே பொருத்தமான முறையில் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். சூழலியல் பாதுகாப்பு என்ற பெயரில் மக்களின் வாழ்வாதாரங்களை பலியிட இயலாது.

அதே சமயம் வாழ்வாதாரத்துக்காக சூழல் பாதுகாப்பை புறம்தள்ள முடியாது. வயநாட்டு பகுதியில் மிகவும் பாதுகாப்பற்றவை என கண்டறியப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த குடும்பங்கள் அகற்றப்பட்டன. ஆனால் தற்பொழுது ஏற்பட்டுள்ள பேரிடர் என்பது இந்திய அரசின் புள்ளியல் துறையில் வகைப்படுத்தப்பட்ட பகுதி அல்ல. இது எதிர்பாராத ஒன்று!


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை பாதுகாக்க ஆகும் செலவு என்பது மிகப்பெரிய தொகையை உள்ளடக்கியது. எந்த ஒரு மாநில அரசாங்கம் மட்டுமே இதனை செய்வது சாத்தியம் அல்ல.. இதன் அடிப்படை பொறுப்பும் கடமையும் ஒன்றிய அரசுக்கு உள்ளது என்பது மட்டுமல்ல; நிதி ஆதாரங்களும் ஒன்றிய அரசிடம்தான் உள்ளது.

ஆனால் சூழலியல் பாதுகாப்பு குறித்து கிஞ்சிற்றும் கவலைப்படாத நிர்வாகமாகவே மோடி அரசாங்கம் உள்ளது. எல்டிஎப் அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் ஏன் ஒன்றிய அரசை விமர்சிப்பது இல்லை? காட்கில் போன்றவர்கள் இந்த பேரிடர் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என சொல்கின்றனர். மாதவ் காட்கிலின் கருத்துக்கு மாறாக கொச்சி பல்கலைக்கழகத்தை சேர்ந்த மூத்த விஞ்ஞானி எஸ். அபிலாஷ் என்பவர் அரபிக்கடலில் உருவாகும் அதீத வெப்பம்தான் கேரளாவுக்குள் ஆழமான மழை மேகங்களை உருவாக்கி பெரும் மழையையும் நிலச்சரிவையும் ஏற்படுத்துகிறது என கூறியுள்ளார்.

இந்த நிலச்சரிவுக்கு பின்னர் மேற்கு தொடர்ச்சி மலையின் சூழலியல் பாதுகாப்பு குறித்து மேலும் கவனத்தையும் நடவடிக்கை களையும் எல்டிஎப் அரசாங்கம் மேற்கொள்ளும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை. எனினும் இப்போதைய உடனடித் தேவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்பதும்தான்! அதில் எல்டிஎப் அரசாங்கம் மக்களின் உதவியுடன் சிறப்பாகச் செயல்படும் என்பதை கூறத்தேவையில்லை.

– அ. அன்வர் உசேன்

Written By
Editorial Desk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *